இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

November 29, 2009

இணைக்குறள் 1330 :[அதிகாரம் 003: நீத்தார் பெருமை] குறளுக்குக் குறளால் விளக்கம்

21)
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு
விளக்கக் குறள் :
ஒழுக்கம் சிறந்த துறவியர் நற்பெருமை
சொல்லிஉயர்த் தும்சான்றோர் நூல்


22)
துறந்தார் பெருமை துணைக்கூறி வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று
விளக்கக் குறள் :
அ)
துறந்தோரின் நற்பெருமை கூறல்; உலகில்
இறந்தோரை எண்ணுதல் போல்
ஆ)
துறவியர் நற்பெருமை கூறுதலின் ஞாலத்(து)
இறந்தோரை எண்ணுவ(து) எளிது


23)
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டோர்
பெருமை பிறங்கிற்று உலகு
விளக்கக் குறள் :
இருபிறப்பும் தேர்ந்தறிந்து நன்நெறி காப்போர்
பெருமை சிறந்தது(உ)ல கில்


24)
உரனென்னும் தோட்டியான் ஆரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
விளக்கக் குறள் :
அறிவென்னும் அங்குசத்தால் ஐம்புலனும் காப்போர்
துறவென்னும் ஞாலத்து வித்து


25)
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்க்கோமான்
இந்திரனே சாலுங் கரி
விளக்கக் குறள் :
ஐம்பொறி ஆசை அழித்தவன் ஆற்றலுக்கு
இந்திரனே போதியச் சான்று


26)
செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
விளக்கக் குறள் :
அ)
பெரியோர் பெரும்செயல் செய்வார்; சிறியோர்
பெருமைச் செயல்செய்யா தோர்
ஆ)
அருஞ்செயல் செய்வோரே சான்றோர் ; சிறியோர்
எனப்படுவோர் ஒன்றும்செய் யார்


27)
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு
விளக்கக் குறள் :
அ)
புலம்ஐந்தும் ஆள்பவனைத் தேடிவந்து சேரும்
உலகினை ஆளும் பலம்
ஆ)
ஐம்புலன் ஆட்க்கொள்ளும் ஆற்றல் உடையோரை
என்றும் போற்றும் உலகு


28)
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
விளக்கக் குறள் :
பற்றற்ற சான்றோர் பெருமை அவர்தம்
அறவழிச் சொல்உணர்த் தும்


29)
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது
விளக்கக் குறள் :
அ)
நற்பண்புச் சான்றோர் பெருங்கோபம் கொண்டால்
சிறுகணம் கூடநிலைக் காது
ஆ)
நற்பண்புச் சான்றோரின் கோபம் எதிர்த்து
ஒருகணம் நிற்கஇய லாது

[இங்கே காத்தல் = இரண்டு பொருளும் தருவதாய் உணர்கிறேன்]
30)
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
விளக்கக் குறள் :
அ)
அனைத்துயிர் அன்புகொண்(டு) அருள்புரிவார் அந்தணர்
என்ற அறஞ்செய் பவர்
ஆ)
அனைத்துயிர் அன்பால் அருளால் அறமாய்
அணைப்பார் அந்தணர்என் போர்

November 21, 2009

இணைக்குறள் 1330 :[அதிகாரம் 002: வான் சிறப்பு] குறளும், குறளால் விளக்கமும்

அதிகாரம் 002 : வான் சிறப்பு
11)
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

விளக்கக் குறள் :
அ)
மண்ணுயிரின் வாழ்வுயர வானிருந்து மண்புகும்
நல்அமுதம் என்றும் மழை

ஆ)
மண்ணுயிரின் வாழ்வுயர வானிருந்து காலமெல்லாம்
மண்புகும்அ மிழ்தாம் மழை



12)
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

விளக்கக் குறள் :
உணவாக்க உற்ற துணையாகும்; உலகுக்(கு)
உணவாய் இருக்கும் மழை



13)
விண்நின்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி

விளக்கக் குறள் :
பருவமழை பொய்த்தால் கடும்பசியில் உய்யும்
பெரும்கடல் சூழ்இவ் உலகு




14)
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்


விளக்கக் குறள் :
அ)
புயல்போல் வழங்கும் மழைவளம் குன்றின்
வயலில் உழவும்குன் றும்

ஆ)
வாரி வழங்காது மாரி குறைந்துவிடின்
ஏரின்றி வாடும் நிலம்



15)
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை


விளக்கக் குறள் :
பொய்த்துக் கெடுத்துப்பின் பெய்து கொடுக்கவும்
செய்யவல்ல(து) இங்கு மழை




16)
விசும்பின் துளிவீழின் அல்லாமல்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது

விளக்கக் குறள் :
மழைத்துளி வீழாது போய்விடின் மண்ணிலொரு
புல்நுனியும் காண்ப(து) அரிது




17)
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

விளக்கக் குறள் :
பெரும்கடலும் வற்றும்;நீர் மேகமாய் மாறி
வரும்மாரி நின்றுபோ னால்



18)
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

விளக்கக் குறள் :
அ)
வான்மழை பொய்த்தால் உலகில் தடைபடும்
வானவரை வாழ்த்தும் விழா

ஆ)
வானவர்க்குப் பூசை நடக்காது போய்விடும்
வான்மழை பொய்த்தபின் இங்கு



19)
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்

விளக்கக் குறள் :
செய்தானம் நற்தவம் நின்றுவிடும் வான்மழை
பெய்யா உலகம் தனில்


20)
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கு
வான்இன்று அமையாது ஒழுக்கு

விளக்கக் குறள் :
நீர்இன்றி வாழ்க்கை நகரா(து) உலகினில்;
யார்க்கும் அதுபோல் மழை

November 20, 2009

இணைக்குறள் 1330 : (திருக்குறளும் விளக்கக் குறளும்) :

அன்பின் உள்ளங்களுக்கு .,

திருக்குறளுக்கு விளக்கவுரையை குறளிலேயே அமைக்கலாம் என்ற முயற்சி இது .
. நான் செய்யக்கூடியது , செய்யக் கூடாதது பற்றிய தங்களின் அறிவரைக்காக வேண்டி நிற்கிறேன்

இதனப் பற்றிய தங்களின் மேலான கருத்துக்களை அறியக் காத்திருக்கிறேன்.


அதிகாரம் 01 : கடவுள் வாழ்த்து :
================================


01)
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு



விளக்கக் குறள் :
அ)
எழுத்துக்(கு) அகரம் ; அதுபோன்றே இப்பூ
வுலகுக்கு என்றும் இறை

ஆ)
எழுத்துக்கு மூலம் அகரம்; இறைவன்
உலகத்தில் வாழும் உயிர்க்கு

இ)
அகரமே மூலம் மொழிக்கு; இறைவன்
பகலவன்கீழ் வாழும் உயிர்க்கு

ஈ)
அகரம் மொழிக்கெல்லாம் மூலம்; பகலவன்கீழ்
வாழும் உயிர்க்கு அவன்



02)
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

விளக்கக் குறள் :
கற்றறிந்தோர்; ஆண்டவன்தாள் ஏற்காதோர்; எல்லாம்
அறிந்தும் அறியா தவர்




03)
மலர்மிசை ஏகியான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவா வார்

விளக்கக் குறள் :
மலர்மனம் வாழும்இறைத் தாளடி சேர்ந்தோர்
உலகில் நிலைத்துவாழ் வார்



04)
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

விளக்கக் குறள் :
பற்றற்ற ஆண்டவன் நற்பாதம் சேர்ந்தார்க்கு
முற்றும் இடையூறு இல்




05)
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

விளக்கக் குறள் :
அ)
பொருளாசை காரிருள் அண்டாது நற்கடவுள்
பொருள்தம்முள் ஏற்றார் இடம்

ஆ)
அறியாமை ஆசையும் அண்டாது; ஆண்டவனின்
அர்த்தம் புரிந்தோர் வசம்




06)
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

விளக்கக் குறள் :
ஐம்புலம் ஆட்கொண்ட ஆண்டவன் பாதைசெல்வோர்
என்றும் நிலைத்துவாழ் வார்




07)
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

விளக்கக் குறள் :
அ)
ஒப்பில்லா ஆண்டவன் தாள்சேர்ந்தார் அல்லாதோர்
துக்கம் களைதல் அரிது


ஆ)
தனக்கு இணையில்லா அவன்தாள்ப் பணியாதோர்
துன்பம் தவிர்த்தல் அரிது


08)
அறவழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறஆழி நீத்தல் அரிது

விளக்கக் குறள் :
அறக்கடவுள் தாள்சேரா(து); இப்பிறவி ஆழ்கடல்
சற்றும் கடத்தல் அரிது




09)
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

விளக்கக் குறள் :
இருந்தும் இயங்காப் புலமாம்; அவன்தாள்
விரும்பி வணங்காத் தலை




10)
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

விளக்கக் குறள் :
பிறவிப் பெருங்கடல் நீந்திக் கடக்கார்
இறைவன் அடித்தொடரா தார்

November 13, 2009

திருக்குறளும் , என்குரலும்...

அதிகாரம் :3 நீத்தார் பெருமை
(ஆசிடைவெண்பாவாய் என்குறளும் , திருக்குறளும் )

21)
ஒழுக்கம் சிறந்த துறவியர் நற்பெருமை
சொல்லிஉயர்த் தும்சான்றோர் நூல்கள் - உலகில்
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு



[முதல்குறள் ஈற்று = நூல் ; ஆசு = கள் ]

23)
இருபிறப்பும் தேர்ந்தறிந்து நன்நெறி காப்போர்
பெருமை சிறந்தது(உ)ல கில்காண் - பிறப்பில்
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டோர்
பெருமை பிறங்கிற்று உலகு


[முதல்குறள் ஈற்று = கில் ; ஆசு = காண்]


24)
அறிவென்னும் அங்குசத்தால் ஐம்புலனும் காப்போர்
துறவென்னும் பூமிக்கு வித்து - சிறந்த
உரனென்னும் தோட்டியான் ஆரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து


[முதல்குறள் ஈற்று = வித்து ; ஆசு = - ]


25)
ஐம்பொறி ஆசை அழித்தவன் ஆற்றலுக்கு
இந்திரனே போதியச் சான்று - மனமென்னும்
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்க்கோமான்
இந்திரனே சாலுங் கரி


[முதல்குறள் ஈற்று = சான்று ; ஆசு = - ]


28)
பற்றற்ற சான்றோர் பெருமை அவர்தம்
அறவழிச் சொல்உணர்த் தும்பார் - சிறந்த
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்


[முதல்குறள் ஈற்று = தும் ; ஆசு = பார்]

November 10, 2009

திருக்குறளும் , என்குரலும்...!

அதிகாரம் 2 : வான் சிறப்பு
12)
உணவாக்க உற்ற துணையாகும்; உலகுக்(கு)
உணவாய் இருக்கும் மழைஇங்கு - மண்ணிலே
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை


[முதல்குறள் ஈற்று = மழை ; ஆசு = இங்கு]

13)
பருவமழை பொய்த்தால் கடும்பசியில் உய்யும்
பெரும்கடல் சூழ்இவ் உலகு - விரிநீல
விண்நின்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி


(முதல்குறள் ஈற்று = உலகு ; ஆசு = - ]

15)
பொய்த்துக் கெடுத்துப்பின் பெய்து கொடுக்கவும்
செய்யவல்ல(து) இங்கு மழைமட்டும் - பெய்யாக்
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை


[முதல்குறள் ஈற்று = மழை ; ஆசு = மட்டும் ]

16)
மழைத்துளி வீழாது போய்விடின் மண்ணிலொரு
புல்நுனியும் காண்ப(து) அரிதாகும் - விண்ணின்
விசும்பின் துளிவீழின் அல்லாமல்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது


[முதல்குறள் ஈற்று = அரிது ; ஆசு = ஆகும் ]

17)
பெரும்கடலும் வற்றும்;நீர் மேகமாய் மாறி
வரும்மாரி நின்றுபோ னால்தான் - விரிந்த
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்


[முதல்குறள் ஈற்று = னால் ; ஆசு = தான் ]

November 7, 2009

திருக்குறளும் , என் குரலும் ....!

அதிகாரம் :13 அடக்கம் உடைமை

121)
அடக்கமே சொர்க்கம் அளிக்கும்; தவறின்
கடும்நரகம் தள்ளி விடுமுணர் - சுட்டும்
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
----------------(16)

[முதல்குறள் ஈற்று = விடும் ; ஆசு = உணர்]

124)
நிலையில் வழுவா(து) அடங்கிவாழ் பவன்பிம்பம்
கல்மலையைக் காட்டிலும் மேலிங்கு - நிலைத்து
நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது
-----------(17)

[முதல்குறள் ஈற்று = மேல் ; ஆசு = இங்கு]

November 5, 2009

திருக்குறளும் , என் குரலும்...!

அதிகாரம் 12 : நடுவு நிலைமை

112)
நேர்நிலையில் சேர்த்தோரின் செல்வம்; நிலைத்தவர்
வாரிசுக்கும் நன்மை தருமென்றும் - பாரினில்
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவுஇன்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து
--------------(14)

[முதல்குறள் ஈற்று = தரும் ; ஆசு = என்றும்]

114)
நல்லார் நடுவிலார் என்பதை அவரவர்
மக்கள் குணமுணர்த் தும்பார் - தலைவர்
தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்
-----------------(15)

[முதல்குறள் ஈற்று = தும் ; ஆசு = பார்]

November 3, 2009

திருக்குறளும் , என் குரலும் .....!

அதிகாரம் 11 : செய்நன்றி அறிதல்

101)
ஓருதவி செய்யா ஒருவனுக்குச் செய்யுதவிக்(கு)
ஈருலகும் ஈடாகா திங்குணர் - பாரினில்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது
---------------------(11)

[முதல்குறள் ஈற்று = து ; ஆசு = இங்குணர்]


104)
கடுகளவு சிற்றுதவி; போற்றுவார் பெற்றோர்
பெரும்பனை யின்அள வுக்கு - வெறுமோர்
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்
-----------------------(12)

[முதல்குறள் ஈற்று = வுக்கு ; ஆசு = - ]


107)
துன்பம் துடைத்தநல் நட்பையே ஏழ்பிறப்பும்
நெஞ்சினில் கொள்வார்சான் றோர்பாரில் - என்றும்
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு
-----------------(13)

[முதல்குறள் ஈற்று = றோர் ; ஆசு = பாரில் ]

October 27, 2009

திருக்குறளும் , என் குரலும் ...!

அதிகாரம் 9 : விருந்தோம்பல் :

விருந்தினர் காத்திருக்க நல்லமுதென் றாலும்
விருந்தோம்பா(து) உண்ணல் தவிர்ப்பீர் - ஒருவன்
விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று
----------(8)

[ முதல்குறள் ஈற்று = தவிர் ; ஆசு = பீர் ]


முகமலர்ந்து நல்விருந்தோம் பும்வீட்டில் வாழ்வாள்
அகமலர்ந்து செல்வம கள்தான் - மகிழ்ந்தே
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்
---------------------(9)
[முதல்குறள் ஈற்று = கள் ; ஆசு = தான் ]


அதிகாரம் 10 : இனியவை கூறல் :

இனியசொற்கள் தேடியுரைப் போரின்பா வம்நீங்கி
புண்ணியம் கூடிச்சே ரும்பாராய் - என்றுமிங்கு
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்
-------------------------(10)
[முதல்குறள் ஈற்று = ரும் ; ஆசு = பாராய் ]

October 23, 2009

காத்திருக்கும் தமிழச்சி .....!!


ஊரடங்கும் சாமத்தில் தூங்காமல் நானிருக்க
ஊரெல்லை யில்என(து) உள்ளம் தவமிருக்கு
ஆழத்துள் மூழ்கிவிட்ட அம்மிக் குழவியாய்
ஆழ்மனதுள் உன்நினைப் பு

கருவேல முள்ளொடிச்சுக் கள்ளிச் செடியில்
ஒருசேர நம்பேர ஒண்ணா எழுதிவச்சு
ஊரவிட்டுப் போகையில காத்திருன்னு சொன்னஉன்
வார்த்தையிலென் மூச்சிருக் கு

ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன்
ஊருணிப் பாறையில் ஒருத்தியாத் தானிருக்கேன்
ஊரெல்லாம் சாடைக்கு ஓரணியில் சேர்ந்திருக்கு
யாரென் நிலைசொல்வா ருனக்கு

சொத்தைப்பல் லுன்னுசொல்லி சும்மாப் புடுங்கியே
செத்தைக்குள் வீசுனியே சிங்கப்பல் ஒன்றையே
சொத்தைப்போல் எடுத்தெனது சட்டையில் சுத்தியே
மெத்தைக்குள் வச்சிருக் கேன்

ஊருவந்து தடுத்தாலும் உள்ளேநீ தானிருப்பாய்
யாருவந்து பிரிச்சாலும் என்னுள்நீ வாழ்ந்திருப்பாய்
உன்மூச்சுக் காற்றிலென் மூச்சுவாங் கும்வரைக்
கன்னியிருப் பாளிங்கேக் காத்து

என்றும் மறையாத என்மனச் சூரியனே
இன்றும் குறையாத என்குணச் சந்திரனே
காப்பாய் வடக்கைக் கரையாய் ; உனக்காகக்
காத்திருப்பேன் நான்கரையா மல்

கலங்காதே காத்திருக்குக் காலம் நமக்கு
துலங்காதே நீயில்லா(து) ஒன்றும் எனக்கு
காத்திருப்பாய் எல்லையை சாமியாய் நீயங்கு
காத்திருப்பேன் உன்னைநான் இங்கு

திருத்திய பதிவு :
[ நன்றி : சுபைர் ராமசாமி அய்யா அவர்கள் / சந்தவசந்தம்]

ஊரடங்கும் சாமத்தில் தூங்காமல் நானிருக்க
ஊரெல்லை யில்என(து) உள்ளம் தவமிருக்கு
ஆழத்துள் மூழ்கிவிட்ட அம்மிக் குழவியாய்
ஆழ்மனதுள் உன்நினைப் பு

கருவேல முள்ளொடிச்சுக் கள்ளிச் செடியில்
ஒருசேர நம்பேர ஒண்ணா எழுதிவச்சு
ஊரவிட்டுப் போகையில காத்திருன்னு சொன்னஉன்
வார்த்தையிலென் மூச்சிருக் கு

ஊர்க்கோடி ஓரத்தில் ஒத்தையில் நானிருக்கேன்
ஊருணிப் பாறையின் மத்தியில் தானிருக்கேன்
ஊரெல்லாம் சாடைக்கு ஓரணியில் சேர்ந்திருக்கு
யாரெனைச் சொல்வா ருனக்கு

சொத்தைப்பல் லுன்னுசொல்லி சும்மாப் புடுங்கியே
செத்தைக்குள் வீசுனியே சிங்கப்பல் ஒன்றையே
சொத்தைப்போல் பொத்தியே சட்டையில் சுத்தியே
மெத்தைக்குள் வச்சிருக் கேன்

ஊரே தடுத்தாலும் உள்ளேநீ தானிருப்பாய்
யாரும் பிரிச்சாலும் என்னுள்நீ வாழ்ந்திருப்பாய்
உன்மூச்சுக் காற்றிலென் மூச்சுவாங் கும்வரைக்
கன்னியிருப் பாளிங்கேக் காத்து

என்றும் மறையாத என்மனச் சூரியனே
இன்றும் குறையாத என்குணச் சந்திரனே
காப்பாய் வடக்கைக் கரையாய் ; உனக்காகக்
காத்திருப்பேன் நான்கரையா மல்

கலங்காதே காத்திருக்குக் காலம் நமக்கு
துலங்காதே நீயில்லா(து) ஒன்றும் எனக்கிங்கு
காத்திருப்பாய் எல்லையை சாமியாய் நீயங்கு
காத்திருப்பேன் உன்னைநான் இங்கு

October 21, 2009

திருக்குறளும் , என் குரலும் .....!

அன்பின் உள்ளங்களே .,

திருக்குறளுக்கான எளிய விளக்கமாக (அ ) ஒத்தக் கருத்துள்ள எனது முதல் குறளையும், தொடர்ந்து அதற்கான திருக்குறளையும் ‘ஆசிடை நேரிசை வெண்பா’ வாக அமைத்துள்ளேன் .

தங்களின் மேலான அறிவுரைகளால் , இலக்கின் திசையினை அறிந்தேன் . இலக்கினை நோக்கி செலுத்துங்கள் . இயன்றதைச் செய்வேன்.

நன்றி !

[ 26.7 ஆசிடை நேரிசை வெண்பா

இருகுறள்களை ஒன்று சேர்த்து, ஒரு நேரிசை வெண்பாவாக்க முயலும்போது,
முதல் குறள் 'நாள்' அல்லது 'மலர்' என்ற ஓரசைச் சீரில் முடிந்தால், அந்த ஓரசையுடன்
ஒன்றோ, இரண்டோ அசைகள் சேர்த்தால் தான், தளை தட்டாத நேரசை வெண்பா
(தனிச்சொல்லுடன்) உருவாகும். (ஏன்?) 'காசு', 'பிறப்பு' என்று
முடிந்தாலும் , பொருத்தமான எதுகையுடைய
தனிச்சொல்லைத் தேர்ந்தெடுக்க ஒன்றோ, இரண்டோ அசைகளைச் சேர்க்க நேரிடும்.
இவற்றை 'ஆசிடை நேரசை வெண்பா'க்கள் என்பர். 'ஆசு' என்பது உலோகத் துண்டுகளை
இணைப்பதற்குப் பயன்படுத்தும் பற்று.

நன்றி ; யாப்புலகம் / கவிதை இயற்றிக் கலக்கு / திரு .பசுபதி அய்யா அவர்கள் ]

அதிகாரம் 01 : கடவுள் வாழ்த்து :

எழுத்துக்(கு) அகரம் ; அதுபோன்றே இப்பூ
வுலகுக்கு என்றுமாண் டவன்தான் - உலவும்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
-----------------------(1)

[முதல்குறள் ஈற்று = டவன் ; ஆசு = தான் ]


கற்றறிந்தோர்; ஆண்டவன்தாள் ஏற்காதோர்; எல்லாம்
அறிந்தும் அறியா தவராவார் - முற்றிலும்
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
----------------------(2)

[முதல்குறள் ஈற்று = தவர் ; ஆசு = ஆவார் ]


அதிகாரம் 02 : வான் சிறப்பு :..

மண்ணுயிரின் வாழ்வுயர வானிலிருந்(து) காலமெல்லாம்
மண்புகும மிழ்தாம் மழையது - என்றும்போல்
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று
---------------(3)

[ முதல்குறள் ஈற்று = மழை; ஆசு = அது ]


அதிகாரம் 7 : மக்கட்ப் பேறு :..

கற்றோர் அவையில் மகனை முதன்மைப்
பெறவைத்தல் தந்தை பொறுப்பாகும் - பெற்றெடுத்த
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்
-----------------------(4)

[முதல்குறள் ஈற்று = பொறுப்பு; ஆசு = ஆகும்]


மக்களே சொத்தாவர் ; ஆற்றும் வினைப்பயன்
பெற்றோரை வந்தடை யும்பாரீர் - நற்புகழ்
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையால் வரும்
---------------------(5)

[முதல்குறள் ஈற்று = யும் ; ஆசு = பாரீர்]

அதிகாரம் 8 : அன்புடைமை :..

அணையால் கடலை மறிக்க முடியுமா ?
கண்ணீரே காட்டுமுள்ளத்(து) அன்பதை -- அன்புடையோர்
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்
--------------------------(6)

[ முதல்குறள் ஈற்று = அன்பு ; ஆசு = அதை]




அதிகாரம் 10 : இனியவை கூறல் : ..
இனிமேல் எதனால் கலகம்; அதனால்
இனிமையாய்ப் பேசிப் பழகுவீர் - என்றும்
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்(து) அற்று
--------------(7)

[ முதல்குறள் ஈற்று = பழகு ; ஆசு = வீர் ]

October 12, 2009

திருக்குறளும் , என் குறளு(லு)ம் !

அன்பின் உள்ளங்களே ,

வெண்பாவில் (எனக்கு ) ஒரு புதிய முயற்சி.
ஒர் இருகுறள் வெண்பாவில் முதல் குறள் திருவள்ளுவரிடம் இருந்து பெற்று ,
தொடரும் குறளில் அதற்கு எளிமையாய் விளக்கம் தர முயன்றிருக்கிறேன் .

முதல் குறலின் ஈற்றுக்கும் ( ஓரசை எனில்) வரும் குறளின் முதலுக்கும் எப்படி தளை கொள்வது எனத் தெரியவில்லை.

ஆர்வக்கோளாரில் செய்திருக்கிறேன் ,
தவறெனில் சுட்டிக் காட்டுங்கள் .



அதிகாரம் 01 : கடவுள் வாழ்த்து :

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
- பகலுக்கு
ஆதவனாம்; பூவுலகுக்(கு) ஆண்டவனாம்; பேசுகின்ற
வார்த்தைக்கு என்றும் தமிழ்

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
- முற்றும்
அறிந்தோர்; கடவுள்தாள் ஏற்காதோர்; எல்லாம்
தெரிந்தும் தெரியா தவர்


அதிகாரம் 02 : வான் சிறப்பு :

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று
- வானிலிருந்(து)
மண்ணுயிரின் வாழ்வுயர மண்புகும் ; இவ்வுலகுக்(கு)
என்றும் அமுதாம் மழை


அதிகாரம் 10 : இனியவை கூறல் :

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்(து) அற்று
- இனிமேல்
எதனால் கலகம் உலகில்; அதனால்
இதமாகப் பேசிப் பழகு

October 8, 2009

வீரம் ?


வாழையை வெட்டியே வீழ்த்தி; இளம்குரும்
பாளையைச் சீவியதைப் போரென்பார் - காளையின்
வாலினைக்கூ டத்தொட்டு வீரமதைக் காட்டாத
கோழையுன் தீரம் உணர்

தப்புதான்...தப்புதான் !


”சொத்தப் பிரிச்சுத் தராமப் பொறுப்பின்றி
செத்ததுநம் அப்பாவின் தப்புதான்” -- துக்கத்தில்
பங்கு தவிர்த்து பணத்துக்கேங் கித்தவித்து
பொங்கியெழும் மானுடம் பார்

உயிரா?உயிலா??


உயிர்துறந்த பாவியின் உடலுக்கு முன்னால்
உயில்திறக்கும் சண்டையில் உற்றோர் - உயிலெங்கும்
ஓடுமோ?; மண்ணுள் ஒளிந்த(து) குடும்பத்தின்
கூடி வளர்க்கும் குணம்! ..

காக்கைகள்...


செத்தவரைச் சுற்றிலும் சத்தமாய் உற்றோர்கள்
சொத்துக்குச் சுற்றும் சிலம்பம்பார் - வைத்திருக்கும்
சோத்துக்குக் காக்கைகள் சண்டைபார்; சாய்ந்தது
சேர்த்து வளரும் குணம்

உன்னால் முடியும்


வெட்டிட வெட்டிட வாழ்வளிக்கும் வாழையிடம்
வெட்டியாய் காட்டாதே வீரம் - முடியும்
முடக்கியேக் காட்டிடு முட்டவரும் காளையை;
திட்டிவா சல்முன் முயல்

ஒருவாய் சோறு ..!


தெருவுப் பகையெல்லாம் தீருவ தெப்போ;
திருவிழா வெல்லாம் தொடங்குவ தெப்போ;
ஒருவாய்க் கறிசோறுக்(கு) ஏங்கிக் குழந்தை
ஒருவருச மாய்க்காத் திருக்கு

யாருக்குச் சாதகம்?....


ஆறோடும் பாதையில்நீர் ஊறுமா என்றுநீ
ஆரூடம் பார்த்தே அறிவாயா - யாரிடமும்
ஜாதகம் பார்;தனது சன்மானம் கூட்டவே
சாதகமாய் சொல்வார் அவர் .

நீதான் அந்த .....


தீவிரவா தம்தடுத்துத் தீமைத் துடைக்கவே
தேவனை வேண்டித் துதிப்பது - தேவையா?
உன்னை அறிவாய்; உணருன் அரிதாரம்;
உன்னுள்ளே அந்தவதா ரம்

வெளிச்சம் தேடும் விளக்கு

(09.05.11ல் திருத்தியது )

தண்ணியப் போட்டுவந்து மூஞ்சியிலக் குத்துறான்;
திண்ணையில கண்சொக்கிக் கக்குறான் - என்னசெய்ய?
சுள்ளுன்னு கஞ்சிவச்சு சூடாக் கொடுத்திட்டு
சுள்ளிப் பொறுக்கப்போ ணும்

இது ஆரம்ப நிலை வடிவம் :

தண்ணியப் போட்டுவந்து தூக்கிப்போட்(டு) சாத்தீட்டு
கண்தெரியா(து) கீழேக் கிடக்கிறான் - என்னசெய்ய?
சுள்ளுன்னு கஞ்சிவச்சு சூடாக் கொடுத்திட்டு
சுள்ளிப்பொ றுக்கப்போ ணும்

October 2, 2009

காந்தி விடச் சொன்னார்...!


அந்நிய நாட்டவரின் இந்தியச் சுற்றுலா
வந்தயிடத் தில்கணையாய் வந்துவிழும் வார்த்தைகள்

காந்தியின் வாழ்வினைக் கேள்விகளால் துளைக்கிறார்
காந்தியின் கொள்கையைக் கர்வமாய்க் கேட்கிறார்

எமக்கான வாய்ப்பினை ஏற்றே அமைகிறேன்
எம்மகான் ஆசை எடுத்துமுன் வைக்கிறேன்


”இம்சைக் கிடம்கொடா(து) உந்தி விடச்சொன்னார்

அந்நிய மோகமதை அப்போ(து) விடச்சொன்னார்


தீண்டாமை யைத்தூரத் தள்ளி விடச்சொன்னார்

ஆணாதிக் கம்அவநம் பிக்கை விடச்சொன்னார்


ஆள்க்கொள் ளுமாசை அடியோ(டு) விடச்சொன்னார்

ஆழ்மன வேற்றுமையை மானுடம்வி டச்சொன்னார்


வாய்மைப் பெருக்கியே பொய்மை விடச்சொன்னார்

சோம்பல் அதனை சுத்தமாய்வி டச்சொன்னார்


மண்ணில் மதவேற் றுமையை விடச்சொன்னார்

உன்னில் பயமும் சுயமும் விடச்சொன்னார்”


எடுத்தத் தலைப்பில் எடுப்பாய் முடித்தேன்
அடுத்தொரு கேள்வியைத் தானவர் தொடுத்தார்

”சொன்னார் மகாத்மாவும்; சொன்னதெல்லாம் உங்களுக்கு !
என்னவெல்லாம் விட்டீர்கள் ? என்னிடம் சொல்லுங்கள் !!”


ஒருவரியில் கேட்டு ஓய்ந்தார வர்தாம்
ஒருநொடியில் மூச்சு ஒடுங்கியதெ னக்கு

எதிர்பார்க்க வில்லைஎதிர்க் கேள்வியதை நானும்
எதையும் விடவில்லை! ஏனென்(று) தெரியவில்லை?

அவர்பிறந்த நாள்அன்று விட்டதொன்று மட்டும் ;
அவர்சொல்லா(து) இன்று விடுப்பு

September 30, 2009

உனக்குள் ஒருவன்..!


தீவிரவா தத்தின் துளைக்குமந்த வேர்தனை
தீவிரமாய்த் தூரறுக்கும் வாய்ப்புக்கும் - தீயாய்
எரிக்கவும் காத்திருக்கி றானொருவன்; உன்னுள்
இருக்கும் அவனையு ணர்
[29-09-09]

தீவிர வாதத்தின் கூர்மிகுந்த வேர்தனை
தீவிரமாய்த் தேடித் தரைவீழ்த்த - தீயின்
தனலாக வாய்ப்புக்(கு) தவிக்கும் ஒருவன் ;
உனக்குள் அவனை உணர் ..
[04-10-09]

September 29, 2009

வழுக்கியது பசியிலா? பாசத்திலா ?


வழுக்கியது தொண்டைக்குள் வாயினில் வைத்த
புழுங்கலரி சிச்சாதம்; பயலறிவேன் ஏனிதென்றே;
சொல்லிச்சேர்த் தந்தநெய்யா?; சொல்லாமல் அம்மாவின்
அள்ளியே வார்த்தந்தக் கை

September 27, 2009

பாரதியின்.........!


வேரோடு என்னையே வீழ்த்திய தாய்எண்ணி
யாருமி ருந்துவிடா தீர்பாரும்; தீந்தனலாய்ப்
பாரதிரத் தீயோரை வெந்துதணிப் பேன்;நானே
பாரதியின் அக்கினிக் குஞ்சு

[29-09-09]
[இன்னிசை/ஒருவிகற்பம்]



வேரோடு மண்மீதில் வீழ்த்தியதாய் எண்ணியே
பாராதி ருக்காதீர் பாரோரே - யாருமெதிர்
பாராத நேரமதில் பாரதிரச் சூழ்வேன்;நான்
பாரதியின் அக்கினிக் குஞ்சு ..

[04-10-09]
[நேரிசை/ஒருவிகற்பம்]

வாழ்த்து


26-09-09 அன்று அய்யா தமிழன் வேணு அவர்களின் பிறந்தநாள்

குழுமத்தில் செந்தமிழைப் போற்றும்; வளர்ந்த
குழந்தையின்பி றந்தநா ளின்றேதான் -ஆள்தமிழே
நூறாயுள் தாஎனக்கு! உன்தலைம கன்அவனை
நூறாண்டு நான்வாழ்த் தவே!!

’தமிழ்தான்வே ணும்’என் னுமிடத்தில் தலைவர்
தமிழ்வேணு; தன்னால் வருவாரவர்! - தம்மைத்
தமிழாக்கி இன்பம் தருவார்!!; செழிப்பார்
தமிழன் னையைப்போ லவே

காத்திருக்கும்....!


மறையாத சூரியன்; மண்ணில் எனக்குக்
கரையாத சந்திரன வன்தான் - வரும்வரைக்
காத்திருப்பேன் தெற்கேநான்; இந்திய எல்லையைக்
காத்து வடக்கில வன்

என்றும் மறையாத என்மனச் சூரியனே
இன்றும் குறையாத என்குணச் சந்திரனே
காப்பாய் வடக்கைக் கரையாய் ; கரையாமல்
காத்திருப்பேன் உன்னையிங்கு நான்

நான்

பாதைத் தேர்வு

September 24, 2009

புகையேப் பகை


புண்பட்ட நெஞ்சைப் பதமாக்கிப் பண்படுத்தும்
எண்ணமில்லா(து) ’நண்பன்நான்’ என்பார் - மனதைப்
புகைவிட்டு ஆற்றெனப் பாழ்குழியில் வீழும்
வகை செய்வார் உணர் ..

திருத்தம் :ப்ரசாத்
புண்பட்ட நெஞ்சைப் பதமாக்கிப் பண்படுத்தும்
எண்ணமில்லா(து) ’நண்பன்நான்’ என்பார் - மனதைப்
புகைவிட்டு ஆற்றெனப் பாழ்குழியில் வீழும்
வகையதைச் செய்வார் உணர் ..

September 23, 2009

வானும் நானும்


ஒற்றைத் தலையணையில் ஓட்டுவெளி யில்தனியே
வெற்றுத் தரையினில் வீழ்ந்திருந்தேன் - சுற்றிவரும்
வெண்மேகம்; எட்டடியில் வட்டநிலா; வீழ்ந்தது
என்கா லடியில்சொர்க் கம் ..

சிட்டுக் குருவி - 2


கூடுகட்டி வாழயிங்கே இல்லையொரு குட்டிமரம்
காடுவழிப் போகுதந்த சிட்டுதன் - நாடுவிட்டு
எங்கோ எதிர்த்திசையில் காற்றில் கரைந்தது
மங்கியழும் உள்ளத்து டன்

சிட்டுக் குருவி


அலைபேசிக் கோபுரத்தின் நுண்ணதிர்வில் சிக்கி
நிலைகுலைந்த சிட்டுக் குருவி - கலைந்தோடி;
எங்கும் சுயம்வளர்க்கும் மாண்பில்லா மண்தேடி
பொங்கிப் பறந்த துணர்

வீட்டில் பாடம்


உச்சப் பெருமூச்சோ டென்வாசல் முற்றத்தில்
பிச்சைக்கு நிற்குதொரு பச்சைக் குழந்தை;
விரட்டிக் கதவடைத்தேன்; பின்னால்க் குழம்பி
மிரண்டென் இளைய மகள்


[அமைப்பு : இன்னிசை/இருவிகற்பம்]

உணர்ந்து கொள்


நாடெல்லாம் ஆண்டவனைத் தேடும் உடலுக்குள்
ஆடாமல் உட்கார்ந்தி ருப்பாரவர் - நாடாமல்
இல்லாரைக் காக்கும் எளிய மனதுக்குள்
சொல்லாமல் வாழ்ந்திருப் பார்

[ நேரிசை / இருவிகர்பம் ]

September 22, 2009

கண் தானம்


மண்ணில் பிறந்துபின் மண்ணுள் புதையுமுன்
கண்ணில்லா தோரிடத் தில்விதையுன் கண்ணையே;
வின்னவனே வந்துநின்று காத்திருப் பார்சேவிக்க
மண்ணில் உனக்கு முன்பு

எல்லாம் தெரியும்


ஊர்வல மென்றால் நகர்தனில் தேரோடும்
ஊர்வலம் மட்டுமென் பார்களே - பார்தனில்
கால்நடை ஊர்வலம் பற்றி யெதுவுமே
வாழ்த்தாமல் காப்பார வர்

எல்லாம் தெரிந்தோரி வர்கள் உலகினில்
உள்ளதெல் லாமறிந் தோர்

நவீன மரபு


சொல்லுக்குத் தீந்தமிழாம்; வில்லுக்கு அர்ச்சுனனாம்
கல்லுக் குவைரமாம் என்றெல்லாம் - சொல்லியபின்
சொல்லில்லா மல்திண றிப்பாடி வைத்தனரே;
பல்லென்றால் பாவனாவின் பல்

எய்ட்ஸ்


மதிகெட்டுப் பாதையில் தேடிச் சுகித்தால்
விதிமுடிக்க வந்துசேரும் ஆழிநோய் - சதியவள்
பித்தாகி வீதியில் நின்றிட; நற்குடும்பம்
சித்தம் சிதறிப்போ கும்

நகரத்தான் விஜயம்


அரவமற்றக் காலையில் கொட்டும் இருளில்
வருவது பாம்பா; அசைவது கொள்ளிவாய்ப்
பேயா எனமிரளும் வீரனுக்கு அச்சத்தில்
ஆயெப் படியிறங் கும்

ஏக்கம்


குஞ்சைச் சிறகுக்குள் பொத்திய வான்கோழி
பிஞ்சுவாய்க்குள் கெஞ்சியூட்டும் தேன்சிட்டு - கொஞ்சியே
ஊட்டி விளையாடும் வீதிநாய்; ஏங்கியென்
வீட்டைத் தேடுதே மனசு

மாமியாரான மருமகள்


மருமகளாய் வந்துயே மாந்தமா மிக்கேன்
மருமகளின் எண்ணம் எதுவும் புரியவில்லை;
நம்பியே வந்தோரின் உள்ளம் மிதிப்பவர்
நிம்மதி யும்நிலைக் கா(து)

மருமகளாய் ஏமாந்த மாமிக்கு வந்த
மருமகளின் ஏக்கம் அணைக்கத் தெரியவில்லை;
பட்டுணர்ந்த வாழ்க்கையின் முக்கியப் பாடமது
பட்டென்(று) மறந்தது ஏன்?
18-10-09

நான்


தன்னையெது வும்மிகா தென்றதோர் உள்மனக்
கணக்கிட் டபடியேயி ருந்திடுவேன் - உண்மையில்
தன்னை உணராமல் எண்ணத்துள் மூழ்கியே
தன்னையும் தாண்டா தவன்



திருத்தம் :

தானறியா ஒன்றிருக்கா தென்றதோர் உள்மனதில்
நானறிந்த வாறிருப்பேன் நம்புவீர் -- ஞானமாய்
தன்னை உணராமல் தன்எண்ணம் மூழ்க்கியே
தன்னையும் தாண்டா தவன்

--சி. ஜெயபாரதன்

மாணவன்


விரைவாய்த் துவங்கும் வகுப்பினில் வெண்பா
தரையில் அமர்ந்து படிப்பேன் - துரையின்
கடைசி வரிசையின் வேண்டுகோள் ஏற்று
தொடங்க வருவீர் விரைந்து

வணக்கம்


கரமதை ஊன்றித் தவழவெண் பாவில்
சிரமதைத் தூக்கி வளர - வரும்பாவின்
சீர்தனை வெட்டித் தவறினைச் சுட்டி
உரமிட்டு வாழ்த்திடு வீர்