இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

November 14, 2014

மகளதிகாரம்


குழந்தைகள் தின வாழ்த்துகள்

மகளதிகாரம் / /என்குறள் 426 - 435
பால் மாற்றி இதை மகனதிகாரம் எனவும் கொள்ளவும் :))
”என்ன படிக்கிறாய்” என்றேன்; ”படிநீயும்”
என்றுதந்தாள் பாதி கிழித்து
(கரு: நன்றி: Mohamed Ismail Buhari M )

கிறுக்குவாள்; ”என்னஇது” என்பேன்; ”குரங்கு”என்பாள்;
மாறும் குரங்காகக் கோடு

”ஒருஊர்ல” என்றுநான் சொன்னதையேச் சொன்னாலும்
கேட்பாள்; புதியது போன்று

’நரிபாட்டி காக்காக் கதை’யின் நெறியென்ன
என்கிறாள்; என்சொல்வேன் நான்

படித்தாள் மடித்தாள்பைக் குள்திணித்தாள்; வாய்த்தால்
கிடப்பேன்; அவள்கைமுன் தாள்

நடைபயில முந்தும் உனக்கு குடைபிடிக்க
ஏங்கும் உலவும் நிலவு

தூக்கம்:
______________
தூக்கத்தில் புன்னகைக்கக் கற்றுத் தருமவளை
ஏக்கத்தில் பார்த்திருப்பேன் நான்

மூடிக் கிடக்கும் இமையினுள் ஓடி
அலையும் விழிகள் அழகு

அலைபேசியில் (கடல்கடந்த) தந்தை:
___________________________________________
காதுக்குள் ”அப்பாவா?” என்றகுரல் கேட்டவுடன்
கண்ணில் கசியும் கடல்

காதுக்குள் ”அப்பா-வா!” என்றகுரல் கேட்டவுடன்
கண்ணில் கசியும் கடல்

1 comment:

Yarlpavanan said...

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்