இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

August 7, 2016

நட்பதிகாரம்..!


நண்பர்கள் தின வாழ்த்துகள் !

816)
தன்தவறைக் கல்போன்றும் உன்தவறை எள்போன்றும்
காண்பவனின் நட்பே வரம்


817)
ஆவேசம் நட்பினுள் கொண்டாலும் நட்பாகும்;
வேசமிட்டால தான்தப்பா கும்


818)
சிந்திக்கும் நட்பின் துணைமட்டும் தான்எதையும்
சந்திக்க வைக்கும் உனை


819)
உன்தவறை உன்முன்நின்று சொல்பவன்தான் நண்பன்;உன்
பின்நின்று சொல்பவன் வேறு


820)
சிந்திக்கும் நண்பரை விட்டு விலகியதால்
சந்திக்கு வந்தோர் பலர்

August 6, 2016

நபிமொழி - 15 .... குடும்பவியல் !


என்குறள் 806 - 815 :
உறவியல்:
தாய்க்குப்பின் தாய்க்குப்பின் தாய்க்குப்பின் தான்வாய்க்கும்
தந்தையெனும் பந்தச் சிறப்பு
.............................. புகாரி 5971

கணவனின் செல்வத்தை செய்யும் செலவைக்
கணித்திருப்பது இல்லாள் பொறுப்பு
.................... புகாரி 5365

நல்லறம் தானே இறைவிருப்பு; பிள்ளைகளும்
செல்வமும் இவ்வாழ்வின் ஈர்ப்பு
....................... குர்ஆன் 18:46

சிந்தைத் தெளிவும் ஒழுக்கப் பயிற்சியும்
தந்தை வழங்கும் பரிசு


உணவளிக்க ஆளில்லா வேளையில் நானுண்டு
எனும்மகள்தான் உன்தர்மம் ஆம்

(மேலுள்ள இரு மொழிகளுக்கும் .. (கவனக் குறைவால்)குறிப்பெண்ணைக் பதியத் தவறிவிட்டேன். அறிந்தோர் சுட்டினால் மிக நன்றியுடனிருப்பேன்

இல்லறவியல்:
சமஉரிமை கொண்டோர் எனினும் தமக்கிடையில்
விட்டுக் கொடுத்தால் சிறப்பு
........................ புகாரி 2455

இல்லறத்தில் விட்டுக் கொடுத்தொத்துப் போவதில்
இல்லை ஒருபோதும் தப்பு
......................... புகாரி 2694

இல்லற வாழ்வை இறைவழியில் வாழ்வது;
நல்லறம் செய்வதற்கு ஒப்பு
........................ முஸ்லிம் 1674

உறவுநலம் காக்கச் செலவிடல் என்பது
உரியோர்க் கடமையா கும்
......................... புகாரி 5355

உறவின் நலம்காத்து வாழ்ந்து வருவோர்
உறவை விரும்பும் இறை
......................... புகாரி 5987

July 20, 2016

ஐயன்மேல் ஐயம் கொள்வோர் தன்னால் வீழ்வார் ... !!!!!!!


குறளோனுக்கு ஆதரவாய் ’என்குரல்’ அதிகாரம் ஒன்று :


796)
பொதுமறையைத் தந்தவர்க்குச் செய்வோம் சிறப்பு;
பதுக்கி மறைப்பது எதற்கு


797)
எம்ஐயன் மேல்ஐயம் கொள்பவர்தாம் தன்னைத்தான்
நம்பா தவருக்குச் சான்று


798)
போற்றுவோர் ஏற்றம் பெறுவார்; தூற்றுவோர்
மாற்றம் அடைவார் பிறகு


799)
போற்றி இருந்திருக்க வேண்டியதை சாக்குக்குள்
போர்த்தியவர் சாக்கடைக்கு ஒப்பு


800)
சாதியில்லாப் பார்க்காணப் போதித்த ஐயனுக்குள்
சாதிகண்டார் நாதியில்லாச் சாது


801)
’மடச்சாமி யார்’சொல்லை மந்திரி ஏற்றால்
’மடச்சாமி’ யார்என்று கூறு


802)
நம்பி வருவோரின் சங்கை அறுப்போரா
கங்கைக் கரையிருக்கும் சாது


803)
பாக்களால் பாருக்கு உரைத்தவரைப் சாக்குக்குள்
சாத்திவிட்டுச் சொல்வார்பார் சாக்கு


804)
பாக்கொண்டு பாரை வடித்தவரின் நோக்கம்
உடைப்பவர் பாறைக்கும் கீழ்


805)
ஈரடிக்குள் வாழ்வை அடைத்தவரை ஓரடியில்
வீழ்த்த நினைத்தால் தவறு


July 16, 2016

நபிமொழி - 14 .... தவறு !


தவறியல் :

791)
அவசியம் இல்லாமல் ஆட்சியை ஏற்பது
அதிசயம் என்றால் தவறு
................... முஸ்லிம்3729

792)
சரியான ஒன்றைத் தவறாய்ப் புரிந்தால்
பிழையாய் முடிந்து விடும்
.................. புகாரி 126

793)
தெரிந்த பிறகும் சரியான ஒன்றைத்
தவறோடு சேர்த்தால் தவறு
................. குர்ஆன் 02:42

794)
ஒரேவாசல் தேர்ந்து நுழைந்தால் தவறு;
பலவாசல் முன்னிருக்கும் போது
............. குர்ஆன் 12:67

795)
தேவையில்லா வேளையில்முன் வந்து தரும்உறுதி
தேவையில்லா ஒன்றாகும் ஆம்
.............. முஸ்லிம்3283


July 13, 2016

அயலகவியல் !


786)
விடுதிக்கும் வீட்டிற்கும் மாற்றுண்டு அறிவாய்;
சடுதியில் வந்தடை வாய்


787)
ஒளிதர தன்னை இழக்கும் மெழுகுவர்த்திக்கு
ஒப்பு வெளிநாட்டு உழைப்பு


788)
புலம்பெயர என்னவழி என்போர் அறியார்
புலம்பெயர்ந்தோர் கொண்ட வலி


789)
இரைதேடி அன்று பறந்தவன் ஆனான்
கரைநாடாக் கப்பலைப் போன்று


790)
அயல்நாட்டில் எல்லாம் கிடைத்தாலும்; வாழ்ந்த
வயல்வீட்டை நாடும் மனது

July 6, 2016

நபிமொழி - 13 ...உணவு ! உதவு !!

உறவுகளுக்கு ரமலான் வாழ்த்துகள் !
என்குறள் 781 -785 :

குர்ஆன் 11:06
உலகஉயிர் ஒவ்வொன்றின் தேவைக்கு உணவை
அளிப்பது இறையின் பொறுப்பு


புகாரி 2081
உன்முன் பசியென்று வந்தோர்க்கு உணவளிக்கும்
உன்பின் வருமாம் இறை


முஸ்லிம் 4758
அருகில் இருப்போர்க்கு உணவு தரும்பொருட்டு
உன்குழம்பில் நீர்சேர்த்துக் கொள்


புகாரி 2259
ஒருவர்க்கு உதவ நினைத்தால்; அருகில்
இருப்பவர்க்கு முன்னுரிமை தா


புகாரி 2351,52
பொருளைத் தரும்பொழுது உன்வலப் பக்கம்
இருப்பவர்க்கு முன்னுரிமை தா

July 3, 2016

நபிமொழி - 12 ... மார்க்கம் !


என்குறள் : 776 - 780
சந்தேகம் ஏதுமிங்கு இல்லை; இறையச்சம்
கொண்டோர்க்கு இதுதான் மறை
............... குர்ஆன் 02:02

மார்க்கத்தில் காட்டப் படுவதெல்லாம் நேர்வழிதான்;
வற்புறுத்தல் ஏதுமில்லை இங்கு
............... குர்ஆன் 02:256

இணையில்லான் சொல்லும் மறைஏற்போர் செல்லும்
வழியின்முன் சொர்க்கம் வரும்
............... முஸ்லிம் 16

இறையின் மறையை முழுமையாய் ஏற்போர்
முறையற்ற வற்றைச்செய் யார்
.............. முஸ்லிம் 104

தேவையிவன் என்றால்உன் பாதையை, சேவையை
மார்க்கத்தில் ஏற்றும் இறை
.................. புகாரி 71

’மிஸ்டர்’க்குறள் = ’திரு’க்குறள்

இன்றையச் சூழலில் ... தமிழோடு கலந்து தமிழாகவே மாறிவிட்டன சி(ப)ல ஆங்கிலச் சொற்கள் என்பதை மறுக்க இயலாது.. (தங்கிலீஷ் / தமிங்கிலம்) இதன்விளைவாகவே இந்தப் பதிவு ... ஒரு விளையாட்டாய் எடுத்துக் கொள்ளவும் ... டேக் இட் ஈசி :))

771)
சரியென்றும் சாரியென்றும் சொல்லத் தெரிந்தோரின்
வாழ்வும் சரியாதாம் ஆம்

772)
அமிர்தாஞ்சன் அல்லது அமிர்தம்தான் என்றாலும்
மிஞ்சும் பொழுதாகும் நஞ்சு

773)
காப்பியின்பின் பேஸ்ட்என்றால் மின்அறிவு; பேஸ்ட்டின்பின்
காப்பி
என்றால் தான்இனிக்கும் வாழ்வு

774)
சர்வர் சரியாய் அமையாது போகுமிடம்
சர்வம் சரிந்துவிடும் ஆம்

775)
காக்காவின் கூட்டுக்குள் குக்கூ இயல்பு;அதுவே
ஓட்டுக்குள் என்றானால் பல்பு

June 21, 2016

நபிமொழி - 11 ... பயமேன் !


நானிருக்க பயமேன் !
766)
அஞ்சாதீர் நீர்எதற்கும்; பார்த்தபடி கேட்டபடி
உங்களுடன் தானிருப்பேன் நான்
............... குர்ஆன் 20:46

767)
எமைநீர் நினைத்திருப்பீர்; நானும் உமைத்தான்
நினைத்த படியிருப்பேன் ஆம்
.................. குர்ஆன் 2:152

768)
அறிவுரையைத் தந்தோம் பிறர்க்கு; மறைந்திருக்கும்
செய்தி அறிவார் பிறகு
........................ குர்ஆன் 38:87 88

அவனிருக்க பயமேன் !
769)
இறையை நினைத்துத் தொழும்பொழுது உந்தன்
அருகில் இருப்பான் அவன்
.................... முஸ்லிம்5212

770)
அருகில் இருப்பான் பதிலும் தருவான்
இறைமுன் துதிக்கும் பொழுது
.................. குர்ஆன் 2:186

நெருப்புடா !


ஆண்_டா ! நெருப்பு_டா !!
761)
கத்தி உறைவிடுத்து; சுற்றித் தலையெடுப்பான்;
கத்தி அடங்கும் களம்


762)
உறையைவிட்டு வந்துவிட்ட வாளாய்; எதிரை
உறையவிட்டுப் பார்ப்பான் இவன்


763)
குத்தவரும் கத்திக்கும் நெஞ்செடுத்துக் காட்டிநிற்பான்;
உக்கிரத்தின் உச்சம் இவன்


764)
வெருட்டும் எதிரிகண்டு அஞ்சான்; வரட்டும்
எதிர்கொள்வேன் என்பான் இவன்


765)
கொல்ல வரும்பகையை வெல்ல; ஒருதிசைக்குச்
சொல்லிவர வைப்பான் இவன்


பி.கு : கபாலி / ஒரு குறியீடு ... எல்லார்க்குள்ளும் இருக்கும் இத்’தீ’

June 16, 2016

நபி மொழி - 10 ..... பொதுவியல் !


என்குறள் 755 - 760 :
முஸ்லிம்4151
விருந்தில் பணிவாய் அமர்ந்துண்ணும் பண்பு;
விரும்பத் தகுந்ததா கும்



முஸ்லிம்4182
ஒருவர் உணவை இருவர் பகுப்பார்;
குறைவாய் இருக்கும் பொழுது



முஸ்லிம்4399
மூவர் இருக்கும் இடத்தில் இருவர்
ரகசியம் பேசத் தடை



முஸ்லிம்5122
அகத்தில் மலர்ந்து முகத்தில் சிரிப்பாய்;
ஒருவரைச் சந்திக்கும் போது


முஸ்லிம்5185
இல்லாது அழிந்து விடுவார்; ஒருவர்தம்
எல்லையை மீறும் பொழுது

June 14, 2016

ஆறு... !


ஆற்றியல் !

751)
முன்நகர்ந்த பின்னால்;பின் வாங்கு வதுதவறு;
பின்னோக்கிச் செல்வதில்லை ஆறு


752)
முன்நகர்ந்தால் தான்ஆறு; தேங்கிப்பின் நோக்கத்
தொடங்கினால் உண்டுதக ராறு


753)
ஆற்றுக்கு அணையிட்டால் சந்ததிக்குச் சோறு;
வழிவிட்டால் மீந்திருக்கும் சேறு


754)
ஆற்றை மறிக்க முயல்வதற்கு முன்சேர்ந்த
சேற்றை அகற்ற முயல்


755)
தாய்மடியைத் தேடிவரும் சேய்போன்று பாய்ந்து
கடலடியில் சேர்ந்துவிடும் ஆறு

June 6, 2016

நபி மொழி - 9 .... ரமலான் நோன்பு ...!


என்குறள் : 741 - 750

முஸ்லிம் 1956
நரகம் அடைபடும், சொர்க்கம் திறக்கும்
ரமலான் தொடங்கும் பொழுது


புகாரி 2008
நன்றெதிர் பார்க்கும் ரமலான் தொழுகைமுன்;
நின்குறைமன் னிக்கப் படும்


முஸ்லிம் 1958
பிறைபார்த்து நோற்று; பிறைபார்த்து நோன்பைத்
துறப்பது மார்க்க மரபு


முஸ்லிம் 1990
கரும்பொருள் கண்மறைந்து, வெண்பொருள் முன்தெரியும்
வேளைக்குள் உண்டு பருகு


முஸ்லிம் 2004
விரைந்துதன் நோன்பைத் துறந்து, விரைந்து
தொழுவோர் இறைக்கு விருப்பு


முஸ்லிம் 2023
தன்னடக்கம் கொண்டோர்தாம் நோன்பிருக்கும் அன்று
துணையோடு இருந்தாலும் நன்று



முஸ்லிம் 2119
தானேமுன் வந்(து)அவன் நன்செய்வான்; நோன்பில்
உணவை உணர்வைவிடு வோர்க்கு


முஸ்லிம் 2093
இருபெரு நாளிலும் நோன்பில் இருப்பதற்கு
மார்க்கத்தில் உண்டு தடை


புகாரி 1975
பகலெல்லாம் நோன்பிருந்த பின்இரவு எல்லாம்
தொழுவதற்கு உண்டு தடை

June 5, 2016

நபி மொழி - 8 ... போரும்... தற்காப்பும் !

736)
பகைவரை நேராகச் சந்திக்க நேர்ந்தால்
பொறுமையைக் காத்தல் சிறப்பு
............... புகாரி 2833

737)
தாக்க இருக்கும் எதிரியை; சொல்லாமல்
தாக்க அனுமதி உண்டு
....................... முஸ்லிம்3564

738)
சூழும் எதிரியைச் சூழ்ச்சியால் வீழ்த்திவிட
போரில் அனுமதி உண்டு
..................... முஸ்லிம்3580

739)
எதிரியை ஏமாற்றி வீழ்த்திவரும் வெற்றி
மதிப்பை இழந்து விடும்
...................... புகாரி 3032

740)
வஞ்சகன் என்றறிந்த பின்அவரை தந்திரத்தால்
வெல்ல முனைந்து விடு
.................... புகாரி 3033

June 4, 2016

அவள் பார்வை ... கூடல் !



731)
தீண்டாது தன்எல்லைத் தாண்டும் அவன்செயலால்
தூண்டாது எரியும் திரி


732)
மோகத்தின் தாகத்தால் என்இடைப் பற்றும்நீ;
மேகத்து இடைப்பற்றும் தீ


733)
சம்மதம் கேட்கும் வரைதான் அவன்குழந்தை
தந்தபின்நான் ஆவேன் அது


734)
ஆனவரை நானவரை அள்ளி அணைத்திருப்பேன்
ஆணவரே நாணும் வரை


735)
என்விருப்பை முன்வந்து தன்விருப்பம் என்றுரைக்க
என்உருவைக் காட்டுமவர் கண்

June 2, 2016

நபி மொழி - 7 .... மரணம் !


என்குறள் : 726 - 730


இறைவிருப்பம் இன்றி எவரும் இறக்க
வழியில்லை என்பது அறி
.................................. குர்ஆன் 03:145

மறைவாய் இருந்தாலும் நிச்சயித்த நாளில்
மரணம்உனை வந்துஅடையும் ஆம்
........................குர்ஆன் 04:78

இறையின் வழியில் அறப்போர் புரிந்து
மரணம் அடைந்தால் சிறப்பு
...............................முஸ்லிம்3824

அறப்போரில் வீழ்ந்தோர் குறைகள்; கடன்தவிர்த்து
மன்னிக்கப் பட்டு விடும்
.................................... முஸ்லிம்3830

இன்னலெதிர் கொள்ளாது இறக்க நினைப்போரின்
முன்வந்து நிற்கும் இழிவு
................................. முஸ்லிம்5203

May 29, 2016

பாட்டி வைத்தியம் - 2



721)
முன்நரை என்னும் குறைமறைந்து போய்விடும்
முள்முருங்கை உண்டுவரு வோர்க்கு


722)
நெல்லிக் கனிநான்கு நாளும்உண்; சொல்லிஇனி
நீளும்உன் வாழ்வுபிறர் முன்


723)
அருகம்புல் சாற்றின் அருமை அறிவாய்;
குருதியைச் சுத்தம்செய் வாய்


724)
அகத்துள் புழுவை அழிக்கும் அகத்தி;
அளவாய்ப் புசிக்கும் பொழுது


725)
வாழை இலைகொண்டு காயத்தைப் போர்த்து;
கொடும்தீயின் தாக்கத்தைப் போக்கு




May 28, 2016

நபி மொழி - 6 ... தர்மம் !


என்குறள் : 716 - 720
யார்க்கும் தெரியாமல் செய்து வரும்தர்மம்
தீர்க்கும்உன் பாவத்தை ஆம்
...............புகாரி 1421

பிறரறியச் செய்துவரும் தர்மமும் நன்று;
பிறர்செய்யத் தூண்டும் அது
..............புகாரி 1421

தேவைக்கு மிஞ்சிய செல்வத்தை; இல்லாரின்
தேவை அறிந்துதர்மம் செய்.
.............. புகாரி 1426

தான்செய்த தர்மத்தைச் சொல்லாது ஒளிப்போரைத்
தான்சேரும் நன்மையனைத் தும்
.......... புகாரி 1430


அளந்து பிறருக்குத் தர்மம் அளிப்போர்க்கு
அளந்தே தருவான் இறை
................. புகாரி 1433

May 24, 2016

குடும்பத் தலைவன் .....!


ஆண் ... இவனே ஆண் !

(+)
711)
வென்றவள்நான் என்னும்தன் நம்பிக்கை;; இல்லாளைச்
சென்றடையச் செய்பவனே ஆண்


712)
மனைவியைத்தன் தாய்க்குச் சமமாய் நினைத்து
நிலைக்கவைத்தால் தானவன் ஆண்


713)
சிரித்திருக்க வைப்பதிலும்; பெண்ணின்கண் ணீரை
நிறுத்திவைக்கப் பார்ப்பவனே ஆண்


(-)
714)
இல்லாளை வென்றவன்நான் என்றெண்ணி வாழ்பவன்தன் இல்லறத்தில் வீழ்ந்தவன்தான் ஆம்

715)
இல்லாளை வெல்ல நினைப்பவன் இல்லறத்தில்
வெல்வதற்கு இல்லை வழி

May 22, 2016

நபி மொழி - 5 .....இறை...அவன்....இறை(ய)வன் !


என்குறள் 706 - 710 :

குர்ஆன் 01:02
அகிலம் படைத்தான்; நிலைக்கவைத்தான்; எல்லாப்
புகழும் அவனுக்கே தாம்


குர்ஆன் 02:106
ஒன்றை மறுத்தான் எனிலதைக் காட்டிலும்
நன்றாய்த் தருவான் அவன்


குர்ஆன் 02:154
இறையின் வழியில் உயிரை இழந்தோர்
இறந்தவர் இல்லை உணர்



குர்ஆன் 02:190
போர்தான் எனினும் வரம்பை மீறினால்
ஏற்க மறுப்பான் அவன்


குர்ஆன் 06:103
உன்கண் அறியாமல் உன்கண்ணுக்கு உள்பார்க்கும்
நுட்பம் அறிவான் அவன்

அரசு...இயல்.....அரசியல் !


அரசு (+)
701)
மன்னனை மக்கள் மறந்திருப்பார் என்றால்
நடப்பது நல்லாட்சி ஆம்

702)
மன்னன் குடியைப்போல் வாழ்ந்தால்; குடிக்கெல்லாம்
மன்னன்போல் வாழ்வமையும் ஆம்

703)
அசுர பலத்தில் அரசு; வெளுக்கும்
உரச நினைப்போர் முதுகு

அரசு (-)
704)
ஆயுதத்தின் போர்வைக்குள் ஆளுபவர் வாழ்ந்திருக்கும்
நல்லமைதிப் பூங்காநம் நாடு

705)
ஆட்சியால் நாடழிந்தால்; ஆள்வோரைத் தேர்ந்தெடுத்தோர்
தான்அதற்கு மொத்தப் பொறுப்பு

May 6, 2016

நபி மொழி - 4



என்குறள் 696 - 700 :
சொல்லியதை மிஞ்சுவோர்; நம்பிக்கை யைக்கொல்வோர்;
பொய்சொல்வோர் வஞ்சகர் ஆ
ம் .............. புகாரி 33


நம்பி, புனித இரவன்று நின்றுதொழும்
பொல்லார்ப் பழியழியும் ஆம்
............... புகாரி 35, 37


அறப்போர் புரிவது இறைமேல் நிறைந்திருக்கும்
நம்பிக்கை யுள்ஒன்றாம் ஆம்
.............. புகாரி 36


நிரந்தரமாய்ச் செய்யப் படும்நல் அறம்தான்
இறைக்கு மிகவிருப்பம் ஆம்
..............புகாரி 43


மார்க்கத்தை ஏற்றுள் நுழைந்தபின் வேற்றாகி
மாறியவர் யாருமில்லை ஆம்
............புகாரி 51

பார்....இப்படியும் பார்...!




சோதனையியல் :
691)
வாய்ப்பு வருமென்று வாய்ப்பார்த்து நிற்காமல்
வாய்ப்பை உருவாக்கப் பார்

692)
கூறியது யாரென்று பாராது; பாருக்குக்
கூறியது யாதென்று பார்


693)
எதிலும் அடைஆழம் என்பார்; முதலில்
அவரது அடையாளம் பார்


694)
விழுந்ததெங்கு என்பதைப் பாராது உனக்கு
வழுக்கியதெங்கு என்பதைப் பார்


695)
நின்று தயங்கியவர் வென்றதில்லை; நன்றாய்த்
துவங்கியவர் நின்றதில்லை பார்

May 4, 2016

நபி மொழி - 3 ......


என்குறள் 686 - 690 :


செயலின் விளைவனைத்தும் எண்ணத்தைச் சார்ந்தே
இயல்பாய் அமைந்து விடும்
............................. புகாரி 1

இல்லார்ப் பசிப்பிணியைப் போக்குவதும்; எல்லார்க்கும்
சொல்லும்நல் வாழ்த்தும் சிறப்பு
........................ புகாரி 12, 28

தம்உயர்வைத் தம்உறவும் பெற்றடைய வேண்டாதார்
கொண்டஇறை நம்பிக்கை வீண்
........................புகாரி 13

மார்க்கநலன் காப்பதற்கு; தன்னுள் ஒடுங்குவதும்
மார்க்கத்தின் ஓரம்சம் ஆம்
............................. புகாரி 19

நாணும் குணமும் இறையின்மேல் நம்பிக்கைக்
கொண்டோரின் நற்பண்பா கும்
........................... புகாரி 24

நன்றி :படம் :FACE BOOK :Des Pardess / Haroon Rasheed

May 3, 2016

வாய்ப்பு ...!



681)
சிரித்துரைக்கும் போதுபொய் மெய்யாய்;மெய் பொய்யாய்
உருமாற உண்டாகும் வாய்ப்பு


682)
வரிசையில் வந்தவரை வாய்ப்பார்க்க வைத்துவிட்டு
வாரிசை வந்தடையும் வாய்ப்பு


683)
மிஞ்சியதைத் தந்துன் உழைப்பையள்ளித் தின்பவரை
மிஞ்சவும்ஓர் நாள்வரும் வாய்ப்பு


684)
துச்சமென்று யாரையும் தூற்றாதே; யார்க்குமுண்டு
உச்சமொன்றை வந்தடையும் வாய்ப்பு


685)
நல்லதென நாம்நினைக்கும் ஒன்று பிறர்கண்ணுக்கு
அல்லதென வாகஉண்டாம் வாய்ப்பு

April 29, 2016

பகைச் சிறப்பு ...!



676)
உனைஅறிய வேண்டுமெனில் உற்றுப்பார் உன்பகையை;
எல்லாம் தெரியும் அவர்க்கு


677)
சிறந்த எதிரியைத் தேர்ந்துன் உறவாக்கு;
எதிர்காலம் ஆகும் இலகு


678)
பகைத்தும்உன் அந்தரங்கம் காக்கப் படுமென்றால்;
அப்பகையை நட்பாக்கிக் கொள்


679)
வெற்றி அடைந்திட வேண்டுமெனில்; சுற்றி
இருந்திட வேண்டும் பகை


680)
புகையும் மனம்கொண்ட நட்பைவிட; கொல்லும்
பகையின் உறவு சிறப்பு


April 26, 2016

நபி மொழி - 2 ..... தொழுகை ..!


671)
வலுவாய் உயர்வான் ஒருவன்; தொழுகையை
நோக்கி நகரும் பொழுது
.......................புகாரி

672)
பிறர்தொழ, முன்வந்து இடம்தர, யாரும்
சுருங்கத் தொழுவதும் நன்று
...................புகாரி 90

673)
உரிய பொழுதில் இறையைத் தொழுவது
உயரிய நற்செயல் ஆம்
........................புகாரி 527

674)
குறிகேட்டாய் என்றால் குறைக்கப் படும்;நாற்
பதுநாள் தொழுத கணக்கு
.........................முஸ்லிம் 4488


675)
விருப்பத் தொழுகையை வீட்டில் செலுத்து;
கடமைத் தொழுகைத் தவிர்த்து
................இன்னுகுஸைமா 1143
(அல்லது)
கடமைத் தொழுகைக்குப் பள்ளி; விருப்பத்
தொழுகைக்கு வீடு சிறப்பு

April 25, 2016

முத்தவியல் !



முத்தவியல் ... முத்த அவியல் !


666)
முடித்து விடுவோமா முத்தத்தோடு என்றானே;
முற்றாதது என்பது அறிந்து


667)
உன்மத்தம் கொண்டலையும் உன்னைச் சரியாக்க
என்முத்தம் ஒன்றே மருந்து


668)
சிப்பிக்குள் முத்தொன்றைக் கண்டெடுத்தேன்; முத்தென்றேன்
கேட்டவுடன் முத்திவிட்டான் ஏன்


669)
இசென்றேன்; உச்சென்றாள்; பச்சென்றென் உச்சியில்
நச்சென்று வைத்தாளே ஒன்று


670)
யுத்தத்தில் நாளும்தான் தோற்பேன்ஆம்; தண்டனையாய்
முத்தத்தைத் தின்பவன் நான்

April 23, 2016

புத்தகமே புத்தகம் !


சிறப்பு : இன்று புத்தகதினம் !

மேலும் ஒரு சிறப்பு(எனக்கு) : ஐயனோடு சேர்ந்து ஐயனின் இலக்கை(1330) ஒருமுறை முடித்தபின்னர்... என்வழிலில் என்குரலை .. என்குறளால் ..ஐயனில் பாதியை மீண்டும் ஒருமுறைத் (665) தொட்டிருக்கிறேன் என்பதில் பெருமைதான் (எனக்கு)



661)
நூல்பிடித்துச் சீரான பாதையில்உன் வாழ்வை
வழிநடத்தும் நீபடிக்கும் நூல்


662)
நூலைப்போல் சேலைஆம்; இன்றுநீ தேரும்நூல்
நாளைவழி காட்டும் உனக்கு


663)
புள்ளியில் தான்தொடங்கும் நேர்க்கோடு; பள்ளியால்
தானமையும் நேர்வழி வாழ்வு


664)
முன்னுள்ளோர் சொல்தவிர்த்து முன்னோரின் சொல்உயர்த்து;
தன்னால் சிறக்கும்உன் வாழ்வு


665)
பழம்பெரும் சொற்பொருளைப் புத்திக்குள் ஏற்று;
பலம்பெறும் இவ்வுலக வாழ்வு


April 18, 2016

உன் வழியைத் தேர்ந்தெடு ..!


656)
நூல்படித்தச் சான்றோரின் தோள்பிடித்துச் செல்வோரின்
வாழ்வமையும் எண்ணியது போல்

657)
கற்றவரைப் பின்தொடர்ந்தால் பேறு;செல்வம் பெற்றவரின்
பின்சென்றால் உன்கதை வேறு

658)
இக்கட்டில் உள்ளோரின் சொற்கேட்டுப் பின்தொடர்ந்தால்
சிக்கலுக்குள் சேர்க்கும் அது

659)
தீரருடன் பேசாமல் பின்போதல் என்பதுதேன்;
மூடருடன் பேசுவதும் வீண்

660)
யார்பின்னும் சேராமல் நேர்வழியை நீதேர்ந்தால்
ஊர்உன்னைப் பின்தொடரும் பார்

April 16, 2016

நபி மொழி - 1 ..... என் வழி ..!


வாழ்க உறவுகள் ....
நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்...எல்லாரையும் சென்றடையும் வகையில் எளிய குறளில் என்நடையில் பதிக்கவேண்டும் ..என்னும் எனது நீண்டநாள் கனவுத்திட்டத்தின் முதல்ப்படி இது .... அன்பு உள்ளங்கள் வழிகாட்டினால் தொடர்வேன் ..
( முக்கியக் குறிப்பு : வழிகாட்டி யாரும் இன்றி ... அவனை நம்பி.. சுயமாய் / சுயம்பாய்த் தொடங்கி இருக்கிறேன்... குற்றம் குறை இருந்தால், மாற்றுக் கருத்திருந்தால் குட்டிச் சொல்லுங்கள்... நன்றென நினைத்தால் தட்டி முன்செலுத்துங்கள் )

என்குறள் :- 646 - 655
பாட்டன் திருக்குரலை_பாட்டாய், திருக்குறளாய்
ஏட்டில் விதைப்பேன் இனி

நபி மொழிகள்:


இறையை எதனோடும் செய்யாதீர் ஒப்பீடு;
அறிவீர் அவர்க்கில்லை ஈடு
./அல்குர்ஆன் 19:74

அணுஅளவு தீதோ அணுஅளவு நன்றோ
அனுபவிப்பார் செய்தோர் அதை
./அல்குர்ஆன் 99:7,8

கவனத்தை ஈர்க்கும் பொருட்டு கவனம்
தவறித் தொழுவோர்க்குக் கேடு
./அல்குர்ஆன் 107: 5,6,7


கூடும்நற் செல்வமுடன் நீண்டநாள் வாழ்ந்திட
கூட்டுக் குடித்தனம் செய்
./புகாரி 2067


தன்உழைப்பால் வந்தடையும் எவ்வுணவும் இவ்வுலகில்
ஆகச் சிறந்த உணவு
./புகாரி 2072

தங்கத்தில் ஆனதட்டில் உண்போரின் அங்கத்துள்
சேரும் நரக நெருப்பு
./புகாரி 5634


உருவோஉன் கைஇருப்போ அன்றி பிறர்க்(கு)உருகும்
உள்ளம் இறையின் விருப்பு
./முஸ்லிம் 5012

தற்பெருமை உன்னுள் கடுகளவே சேர்ந்தாலும்
சொர்க்கத்தில் இல்லை இடம்
./முஸ்லிம் 131

புறம்பேசும் வீணருக்குச் சொர்க்கத்து அருகில்
வருவதற்கும் வாராது வாய்ப்பு
./முஸ்லிம் 168


April 14, 2016

தமிழ் ..!


உறவுகளுக்கென் இனியநாள் வாழ்த்துகள் !
641)
இங்குமுள்ள தங்குமுள்ள தெங்குமுள்ள தென்றுமுள்ள
என்தமிழ்த்தாய் முன்வைத்தேன் வாழ்த்து

642)
புலம்பெயர்ந்தோர் வாயில் நிதம்புழங்கி நாளும்
பலம்பெற்று நீளும் தமிழ்

643)
இகழ்ந்துமிழ்ந்து கொல்லவரும் சொல்தமிழ் என்றால்
அமிழ்தெனவும் கொள்வோர் உளர்

644)
அமிழ்தாய் எதையோ நினைத்தாய் அமிழ்ந்தாய்;
உணர்வாய் தமிழ்தான்உன் தாய்

645)
தமிழுக்குச் செய்யாதே; செய்வதைச் செய்தமிழில்;
தானே செழிக்கும் தமிழ்



April 8, 2016

தேர்தல்:-... ஓட்டு....துட்டு.....வெட்டு !!!!



636)
தேர்தல்நாள் தேர்வதற்கு; கையூட்டுப் பெற்றோர்க்கு;
கூரில்லா ஆப்படிக்கக் கூறு

637)
கடமைக்குக் கையேந்தும் கீழோர்; கிடைத்ததைக்
கவ்வும் கடிநாய்க்கும் கீழ்

638)
கையேந்தி கையூட்டு வாங்கிவிட்டு; கைநீட்டி
ஓட்டிட்டால் அக்கையை வெட்டு

639)
ஐந்தாறு பேர்சேர்வார்; ஐந்நூறைத் தந்தேனென்று
ஐந்தாண்டு உனைத்தின்பார் மென்று

640)
எச்சிலிடம் கையேந்தி; உச்சியிலும் ஏற்றிவைத்து;
ஏமாறும் மூத்த குடி