இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 8, 2017

என்னவளே.. அடி... என்னவளே !!


இன்று ....எங்களது மணநாளில்..... எனது இரண்டாம் பிறந்தநாளில் ...என்னவளுக்கு சமர்ப்பணம் .... என்னாலான சின்னஞ் சிறு( நன்றிக்கடன் ) பரிசு !

1116)
உறவுபல உண்டென்ற போதிலும் என்உணர்வு,
ஒன்றுவது உன்னிடத்தில் தான்


1117)
தனக்காகக் காத்திருந்தேன், தன்னிடமே சேர்ந்தேன்,
உனக்குள் எனைக்கண்ட நான்


1118)
கடைசிவரை உன்நிழலில் நானிருக்க வேண்டுவதே
என்கடைசி ஆசையாம் ஆம்


1119)
மூளையெல்லாம் உன்நினைவுள் மூழ்கிவிட, கண்காணும்
மூலையெல்லாம் உந்தன் முகம்


1120)
தேனுள் அடையைப்போல், மீனுள் கடலைப்போல்,
என்னுள் விடையாய் அவள்

September 3, 2017

அனிதா : மனிதா வா ,இனியோர் அனிதா வரவேண்டாம், தடுக்கும் அணி_தா வா :

அனிதா :
என்குறள் 1096 - 1097 :
சிறுகனவை ஏற்றிப் பெருங்கனலாய் மாற்றிப்
பறந்ததுஎம் அக்னிக்குஞ்சு ஒன்று

தட்டிக் கொடுக்காமல் தட்டிவிட்ட தால்இன்று,
சரிந்த சரித்திரம்பார் இங்கு


அனிதாவின் வாய்மொழியும் கேள்வியும் :
என்குறள் 1098 - 1101 :
எதையோ படிக்கவைத்து, வேறெதிலோ தேர்வுவைத்தால்
சாகாமல் என்செய்வேன் சொல்

நேற்றுவரை தோற்றவர்தான் தொங்கினார், நூறுசதம்
வென்றஎனைத் தொங்கவைத்தீர் இன்று

தரவரிசை என்று, வரும்வரிசை கண்டு
கெட்டதென் குட்டிக் கனவு

தூக்கிவிடக் கேட்டுவந்தேன் மன்றம்முன், தூக்கிலிட்டுக்
கொள்என்று சொன்னது அது



மனிதா வா ,சேர்ந்தோர் அணி_தா வா :
என்குறள் 1092 - 1109 :
நோட்டையும் மாட்டையும் நீட்டையும் காட்டியுனை
பூட்டிவைக்கப் பார்ப்பாரை ஓட்டு

நீட்டென்றால் நீட்டவும் ஆட்டென்றால் ஆட்டவும்
வீட்டுநாய் இல்லையடா நீ

நீட்டென்றால் நீட்டும் குரங்காநீ, நீட்டி
முழங்கியுன் நோக்கத்தைக் காட்டு

விலக்குப் பெறச்சென்று விட்டு, விலைபோனோர்
வந்தால் வரவேற்போம் வா

வாதிடச் சென்றுவிட்டு, பேரம் முடிந்துவந்து,
சாதித்தக் கதைசொல்வார் பார்

ஊர்பார்க்க வேண்டுமென்று முந்திவந்து சந்திநிற்போர்
வேரறுத்து ஊதுவோம் சங்கு

பேத்தி வயதொத்தப் பிள்ளையைப் பெண்மணியாய்ப்
பார்ப்போரிங்கு என்னஇனம் கூறு

’’மருத்துவம் தான்படிப்பா?’’ என்றோர் மருத்துவரே
கூறினால் எங்கோ பிழை



’வ’ருத்துவர் ’’கிசுகிசு’’ :
என்குறள் 1110 - 1115 :
ஒதுக்கீட்டால் மேலேறி வந்துவிட்டு, அற்ப
ஒதுக்கீடிங்கு ஏனென்பார் பார்

ஆள்வோர் மனம்வந்து வீசுவதை வைத்துனது
வாழ்வினை ஓட்டென்பார் பார்

எச்சில் எறிவார் எனத்தெரிந்தால் பொச்சையும்
நக்கிவிடும் நாயாகென் பார்

இப்படித்தான் காண்கனவு என்றபின்னும் எப்படியோ
கண்டுகொண்டால் உன்தப்பென் பார்

சோற்றைப் பெறும்பொருட்டுச் செத்தவர்மேல் சேற்றையள்ளி
வீசவந்து முன்நிற்பார் பார்

மருத்துவரின் தந்தையை ஓர்அரசு ஊழியராய்
மாற்றியதைப் போற்றென்பார் பார்

August 31, 2017

பாட்டி வைத்தியம் - 6 _ பெண்ணுக்குக் கைமருந்து !


தாய்மை:
1086)
கருவுறும் காலத்தில் கேழ்வரகு சேர்த்தால்
பெருகும் இரும்பின் வரவு


1087)
நொய்யரிசி வெந்தயக் கஞ்சியால் தாய்ப்பால்
சுரந்துவரும் மிஞ்சும் அளவு


மருந்து:
1088)
கருஞ்சீ ரகம்,முள் முருங்கை கருப்புஎள்சேர்
மாத விலக்காகும் சீர்


1089)
பப்பாளி அன்னாசி கத்தரி எள்ளை,
விலக்காகும் நாளில் விலக்கு


1090)
கூடும் உடலெடையை, கட்டுக்குள் வைத்திருந்தால்
நீர்க்கட்டி நீர்த்து விடும்


1091)
வல்லாரை ஆட்டுப்பால் சேர்த்தரைத்து உண்போர்க்கு
வெள்ளைப் படல்நிற்கும் ஆம்


1092)
வெள்ளைப் படலுக்கு எருமைத் தயிரோடு
அருகம்புல் கீழாநெல் லி


1093)
நெல்லியுடன் தேனும் தொடர்ந்துண்போர்க்கு ஆகுமது
வெள்ளைப் படலுக்குத் தீர்வு


எச்சரிக்கை:
1094)
பூண்டும் மிளகாயும் வெப்பத்தைத் தூண்டும்
கெடுமாம் கருவோடு விந்து


1095)
குருதி வெளுக்கும் கருவும் குலையுமாம்
குங்குமப்பூ கூடும் பொழுது


நடி(த்)......தேன் ! , விட்டுக்கொடு(த்)..... தேன் !!


1081)
பெண்மகிழ ஆணவனும், ஆண்நெகிழப் பெண்ணவளும்
வாழும் உலகுதான் வீடு


1082)
இல்லாளை வெல்வதைத் தன்இலக்காய்க் கொள்வான்ஆண்
தோற்பதுபோல் காட்டுவாள் பெண்


1083)
ஏமாற்றி விட்டதாய்ப் பெண்நினைத்து, ஏமாந்து
விட்டதாய் நான்நடித்தால், தேன்

1084)
என்முன்னால் தூங்குவது போல்நடிக்கும் உன்னை
எழுப்புவது போல்நடிப்பேன் நான்


1085)
எழுப்புவது போல்நடிக்கும் உன்முன் மெதுவாய்
விழித்தது போல்நடிப்பேன் நான்


August 29, 2017

நபிமொழி - 22 :- மது !

என்குறள் / துரைக்குறள் :- 1071 - 1080

மதுவை ஒதுக்கு !
உருமாற்றம் செய்து மதுவை உணவாய்த்
தருவதற்கும் உண்டு தடை
......................முஸ்லிம் 4014

பயம்தரும்நோய் ஒத்த மதுவை, மருந்தாய்ப்
பயன்படுத்த உண்டு தடை
........................முஸ்லிம் 4015

மது,சூது கொண்டுதரும் கேடென்பது இம்மை
மறுமையைத் தாண்டிப் பெரிது
................... குர்ஆன் :02:219

போதை தருமனைத்தும் மார்க்கத்தின் பாதையில்
தள்ளிவைக்கப் பட்டது தான்
......................முஸ்லிம் 4067

திராட்சையுள், பேரீச்சை யுள்,உணவும் நன்மைத்
தராதழிக்கும் பாழ்மதுவும் உண்டு
..................குர்ஆன் :16:76



மதுவோடு வரும் அழிவு !
தொழுவாய் முறையாய், தவிர்ப்பாய்த் தொழுகயை,
போதைத் தெளியாத போது
......................குர்ஆன் :04:43

மதுவை அருந்தத் தடைஉண்டு அதுபோன்று
விற்கவும் உண்டு தடை
...............................முஸ்லிம் 3220

மதுவுக்கு உருதருவோர் விற்போர் பருகுவோர்,
சுமப்பார் இறையின் பழி
..............................இப்னுமாஜா 3371

மதுவை அருந்தி மதியை இழப்போர்,
மிதிக்கப் படவேண்டும் ஆம்
...........................புகாரி 2316

குடிப்போர்க்கு மும்முறை சாட்டையடி காட்டு,
தொடர்வோரை சாவுக்குள் ஓட்டு
....................... அபுதாவூத் 3886

August 23, 2017

தாழ்வுமனம் தவிர்...!


1066)
’என்னடா வாழ்விது’ எனத்தாழும் எண்ணம்கொல்,
என்னுடைய வாழ்விதெனக் கொள்


1067)
என்ன முடியும் உனக்கென்போர் நாணக்கேள்,
‘என்ன முடியாது எனக்கு’


1068)
சாதிக்க வில்லையெனச் சோராதே, இன்றுலகில்
வாழ்வதே சாதனைதான் போ


1069)
எதனால் இழக்கிறாய் உன்தெம்பு, எதுவுமிங்கு
சாத்தியமே சத்தியமாய் நம்பு


1070)
வரம்தந்து வாழ்த்த முடியும் உனக்கு,
வரம்கேட்டு நிற்பது எதற்கு

இயற்கையின் கடிகாரங்கள் / ’அலாரம்’கள்


1061)
கரிச்சான் குயில்தன் குரலை எழுப்பும்
அதிகாலை மூன்று மணிக்கு


1062)
குயில்தன் குரலெடுத்துக் கூவும் அதிகாலை
நான்குமணி ஆன உடன்


1063)
நான்குக்கும் ஐந்துக்கும் மத்தியில் தான்சேவல்
கூவும் பெருங்குரலில் ஆம்


1064)
காகம் குழுவாய்க் கரையத் துவங்கினால்
ஆகும் மணிஅப்போது ஐந்து


1065)
சரசர வென்றுமீன் கொத்திச் சிறகசையும்
போது மணிஆகும் ஆறு

August 22, 2017

பாட்டி வைத்தியம் - 5 _ மோர்...மோர்...மோர்


1056)
கம்பங் களியோடு மோர்கலந்து உண்போர்முன்
பம்மும் வெளிஉலவும் சூடு


1057)
நெய்சேர்த்த வெந்தயத்தை மோர்கலந்து உண்பவர்க்கு
வாய்க்கும் வலிக்கா வயிறு


1058)
மோரை அருகம்புல் சாறுடன் உட்கொண்டால்
நீரிழிவு கட்டுப் படும்


1059)
பித்தம் கபம்வாதம் என்னும்முக் குற்றம்
சமப்பட,மோர் நாளும் குடி


1060)
மோர்,மிளகு கச்சக்காய், பச்சிலை, வெந்தயம்
நீர்க்கட்டிப் போக்கும் மருந்து



August 13, 2017

சிசுவென்று நினைத்தயா..!

செய்தி : உத்திரப்பிரதேசம் .. அரசு மருத்துவமனை...ஆக்சிஜன் பற்றாக்குறை..60மணி நேரம் .. 70குழந்தைகள் மரணம்
1051)
சிசுசிதைமேல் நின்று பசுவதைப் போக்க
நடக்கிறது போராட்டம் நன்று


1052)
பிஞ்சென்றால் என்ன, பணம்கொஞ்சம் பாக்கிவைத்தால்
பிய்த்தெறிய அஞ்சாது அரசு


1053)
எரிவாயு ஏனென்று சொன்னது உயிர்வாயு
வீணென்று நின்றது அரசு


1054)
பிஞ்சுக் குழந்தைகளைக் கொன்றும் பதறாத
வஞ்சகர்க்கு வைப்போம்வா நஞ்சு


1055)
நம்பிவந்த பிஞ்சுகளைக் காப்பாற்றா நண்பா!ஏன்
இவ்வாழ்வு, நாண்டுகொண்டு சாவு


August 12, 2017

தேவன்வழி - 3 :- வாழ்வியல்..!





என்குறள் :- 1046 -1050
தீமைக்குத் தீமையைச் செய்யாதிரு, எல்லார்க்கும்
நல்லதையேச் செய்ய நினை

ரோமர் 12:17

உத்தமர்க்கு உத்தமராய், நல்லவர்க்கு நல்லவராய்,
மாற்றுக்கு மாற்றாய் இரு

சங்கீதம் 18:25

கோபம் வரும்பொழுது உன்இதயத் துள்பேசு
பாவங்கள் செய்யாது இரு

சங்கீதம் 04:04

இரக்கமில்லா உள்ளம் உடையோர்ர்க்கு இரக்கமில்லாத்
தீர்ப்புத்தான் வந்தடையும் ஆம்

யாக்கோபு 2:13

தோற்றத்தை வைத்தெதையும் சொல்லாமல், நீதியின்கீழ்
சொல்லப் படவேண்டும் தீர்ப்பு

யோவான் 07:24

மரம்... தப்பினால் , மரணம் !

என்குறள் :
1041)
வீட்டிலுள்ள மாட்டிற்கும் முன்நாம்நம் நாட்டுக்குள்
காத்திருக்க வேண்டியது காடு


1042)
மழைப்பிச்சை வாங்கும் மரத்தை அழித்தால்
மடிப்பிச்சைத் தான்எடுப்பாய் ஆம்


1043)
கதவாய் மரத்தையெல்லாம் மாற்றிவிட்டு, காற்று
வரத்திறந்து வைப்போம் கதவு


1044)
ஆறா யிரம்தான் விலைபோகும் நூறா
யிரம்கரு தாங்கும் மரம்


1045)
லட்சம் நடுவதே லட்சியம் என்பது
அலட்சியமா கும்நட்ட பின்பு

August 6, 2017

நட்புக்கும் மேலேது இங்கு !

நட்புதின வாழ்த்துகள் !

1036)
”ஏன்வேண்டும் ஏணி!” எனக்குமுன்,என் நட்பவன்
’நான்’என நிற்கும் பொழுது


1037)
மகிழ்வில் கலப்போரைக் காட்டிலும், உந்தன்
இகழ்வில்உடன் நிற்பதுதான் நட்பு


1038)
பங்கெடு நண்பன்வெல் லும்பொழுது, பங்குகொடு
தோற்றுஅவன் வாடும் பொழுது


1039)
ஏனென்றுக் கேட்டுப்பின் தீர்ப்பது தான்உறவு,
தீர்த்தப்பின் தான்கேட்கும் நட்பு


1040)
விருதுதரும் கையை விடமேலாம், தோற்கும்
பொழுதுதொடும் ஒற்றை விரல்

August 1, 2017

நீரா ? ... தண்ணீரா ??



1031)
நீர்சிக்க வைத்தேன் வலையொன்று; ’நீர்’சிக்கி
வீழ்த்தினீர் நீரின் சிறப்பு


1032)
மீன்என்றும் வேண்டாது நீர்வற்ற வேண்டுமென;
நானும் அதுபோலத் தான்


1033)
நீர்சூழ்ந்தால் வீணான மண்ணாகும் தீவு;என்னை
’நீர்’சூழ்ந்தால் நானாவேன் பூவு


1034)
’நீரில்லை’ என்றால்நான் யார்கூறு; நீரில்லை
என்றால் அதுஇல்லை ஆறு


1035)
நீர்தேங்கி நின்றாலும் ’நீர்’தங்கிச் சென்றாலும்
ஊர்சொல்லும் பாசமுண்டங்கு என்று

July 30, 2017

அதுஒரு பொற்காலம் ..!



1026)
பொட்டிட்டு கும்பிட்டக் காலம் வரை,மரத்தை
வெட்ட விடவில்லை நாம்


1027)
கோலத்தை, சாணியை, சூடத்தை, விட்டோரின்
காலத்தைச் சுற்றிஇன்று சீக்கு


1028)
ஆல்,வாகை, வேம்பு,அரசின் கீழிருந்த நாள்வரையில்
சுத்தமாய் விட்டிருந்தோம் மூச்சு


1029)
சுத்தமென்று பாட்டிலுக்குள் நீரை அடைத்தபின்பு,
பொத்தலாகிக் போனது வாழ்வு


1030)
தாதைவடி கட்டிவிட்டு, ஏதுமிலாத் தண்ணீரை,
தாதுநீர் என்கிறோம் இன்று

(தாதுநீர்=மினரல் வாட்டர்)

மழை... மழை..... மழை !



1021)
மழைக்காலம் என்றொன்று இருந்ததாம் அன்று,
மழைநாட்கள் மட்டும்தான் இன்று


1022)
குடையென்ன செய்து விடமுடியும், ஓயாது
அடைமழை பெய்யும் பொழுது


1023)
தொடரும் கொடும்வெயிலை ஏற்கும் மனது
நடுங்கும், மழைவலுக்கும் போது


1024)
மழையில் ஒதுங்கநடை தேடி அலைவோரின்
கையில் விரியாக் குடை


1025)
குடைமறந்த நாளில், தவறாமல் வந்து
விடுமெனக்கு மட்டும் மழை

July 27, 2017

கலிகாலம்.... இன்று !



1016)
தேர்தரவே அந்நாளில் ஆளுண்டு, தொண்டைக்கு
நீர்தரவும் ஆளில்லை இன்று


1017)
பின்நின்று தூற்றும் உறவுண்டு, முன்வந்து
தூக்கத்தான் ஆளில்லை இன்று


1018)
மலர்ந்தால் மதிப்பது உதிர்ந்தால் மிதிப்பது
உலக இயல்பானது இன்று


1019)
கதைகட்டும் கூட்டம் நினைத்தால் எதையும்
சிதைத்து விடக்கூடும் இன்று


1020)
உதவிக்குத் தட்டும் பொழுது கதவுகள்
கல்லாகிப் போகிறது இன்று

July 26, 2017

ஓவியம் : 2 ..... அவளதிகாரம் !



என்குறள் ; 1011 - 1015

கல்லில் இடித்துவிட்டு, மன்னிப்பும் கேட்டுவிடும்
பிள்ளைகுணம் யார்க்குவரும், செல்

கலங்குவோர் தானழுவார், ஆனால், கலங்கியது
இவ்வுலகு உன்அழுகை கண்டு

ஆறுதல் சொன்னால், அடைக்கலம் ஆகிவிடும்
அன்புக்கு அலையும் மனம்

’தன்னால் பிறர்கிழிவு கூடாது’ எனும்எண்ணம்
கொண்டோரைத் தான்சூழும் கேடு

மாறுதல் வேண்டுவோர்க்கு ஆறுதல் தந்தோர்பின்
’ஆண்டவன்’ வந்துநிற்பான் ஆம்

ஓவியம் : 1.. நான் , நான் தான் !



எந்தப்புற்றில் எந்தப்பாம்பிருக்கும் என்னும் பயத்தைவிட, பாம்புகளே இல்லாதப் புற்றுகளை கவலையுடன் கவனித்துவரும் காலக்கட்டத்தில், எதிர்பாராத ஒருப்புற்றில் இருந்து ஓவியமாய்க் கிளம்பி இருக்கிறது அனகோண்டா ஒன்று ! அது... பிக்பாஸ் (BIG BOSS) நிகழ்ச்சியில் ’’ஓவியா’’.
பெரியவர்களின் வாயிலாக, வாழ்வியல் கருத்துக்களை, கடினமானத் தத்துவங்களைக் கேட்கும் போது, அதைத் திணிப்பாகவே உணர்ந்து, தவிர்த்து செல்லவே விரும்புகிறது இன்றைய இளைய சமுதாயம்.. ஆனால்.....
20களில் உள்ள ஒரு சின்னப்பெண், எந்தவிதமான முன் தயாரிப்பும் இன்றி, போகும்போக்கில் , சொல்லிச் செல்லும் பேச்சுவழக்குகள் எல்லாமே வாழ்வியல் தத்துவங்களாய் அமைந்து, இளைஞருக்கு மட்டுமன்றி அனைவருக்குமே பிடித்துப்போகும் அளவுக்கு ஆழமானதாக , எளிதாக, விரும்பிஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கிறதென்றால்., இதை மிகஅதிசயமான, அபூர்வமான நிகழ்வாகவேக் கருத வேண்டி இருக்கிறது .

#கவர்ந்த சில நிகவுகள், வாய்மொழிகள்.... இங்கே ’என்குரல்’வடிவில்
#அது ஒருபொழுதுபோக்கு நிகழ்ச்சிதான் எனினும், நல்லது எங்கிருந்தாலும் எடுத்துக் கொண்டால் தவறில்லை.

என்குறள் ; 1006 -1010

விண்ணே எதிர்நிற்கும் போதும் எனக்கென்ன,
என்னோடு நான்நிற்கும் போது

அறிந்துகொள்ளச் சொவ்வேன்,என் சொல்லைப் புரிந்துகொள்ள
வில்லையென்றால் நீதான் பொறுப்பு

விட்டுத் தருவதை ’வீழ்ந்துவிட்டாய்’ என்றிழிந்தால்
கெட்டுவிடப் போவதில்லை நான்

உண்மையை ஓர்முறை பேசிப்பார், உன்னைப்
உனக்குப் பிடித்து விடும்

எல்லார்க்கும் தான்உண்டு சோகம்அதை எல்லாம்
வெளிக்காட்டி என்ன பயன்



July 14, 2017

அச்சம் தவிர்.. !


1006)
வெல்லுமெண்ணம் உன்னுள் வராத வரையிலும்
புல்லுமுனை வென்று விடும்


1007)
நெஞ்சினுள் மூர்க்கம் வளர்க்கமுனை; அஞ்சினால்
குஞ்சும் மிரட்டும் உனை


1008)
மிரட்சிக்கு இடம்கொடுத்தால் மாய்ந்து விடுமாம்
புரட்சித் தடம்பதிக்கும் வாய்ப்பு


1009)
அச்சம் வழியும் மனமுடையோர்க்கு உச்சம்
அடையும் வழியில்லை ஆம்


1010)
எதிர்பற்றிச் சிந்தித்து அடங்காது எதிர்கொண்டு
சந்திப்போர்க்கு உண்டு சிறப்பு

July 13, 2017

இருவரி கொண்டுன் .. கண்முன் வரவைப்பேன் ... காட்சி..!


இயற்கை:
1001)
மலைமுகட்டில், நிற்கும் மரக்கிளையில், தொங்கும்
இலைநுனியில், தூங்கும் பனி


1002)
தலைமேல் அமர்ந்த பனித்துளி, காய்ந்தால்,
தலைநிமிரும் புல்லின் நுனி


1003)
மூங்கிலிலை மேல்தூங்கும் நீர்த்துளி, கைதாகும்
பாயும் கதிரோன் ஒளி


1004)
மழைநின்ற மாலைப் பொழுது, நனைந்த
இலைகள் கவிழும் அழுது


1005)
மலையில் வழிந்தோடும் தண்ணீர் விழுது,
வழியாடும் ஆலம் விழுது


படங்கள் :




தமிழ் ..!


வாழ்க உறவுகள் !
உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை . இந்தப்பதிவுடன் என்குரலை, என்குறளாகப் பதிந்து 1000 என்னும் இலக்கைத் தொட்டிருக்கிறேன் . குறள்விளக்கமாக ஒரு 1330 + இந்த 1000 + இன்னும் பதிவிடாமல் எப்படியும் ஒரு 1500 ., ஆகமொத்தம், ஏறக்குறைய, 4000 குறள்கள் என்னும் கணக்கில் (இப்போது :)இருக்கிறேன் .. இறையருளுக்கும், நட்பு வட்டத்துக்கும், இப்படி ஒரு முயற்சிக்குப் புள்ளிவைத்து ’உங்களால் முடியும் அண்ணே’ என்று வி(உ)தைத்து உந்தித் தள்ளிவிட்ட சகோ. பாலாஜி பாஸ்கரன் அவர்களுக்கும் எல்லாச் சிறப்புகளும் உரித்தாகுக !

996)
தாயே, உனைவாழ்த்தச் சொல்லில்லாச் சேயானேன்;
உன்மொழியால் சொக்கியதென் நாவு


997)
முறத்தால் புலியடித்தப் பெண்ணும், அறத்தால்
பசுகாத்த மண்ணும் எமது


998)
கணியன்பூங் குன்றன் கணித்தான் தனிநின்று
’யாவரும் கேளிர்’தான் என்று


999)
பாரதிரக் கூறுவேன் பாரதிதான் சாரதியாம்;
ஆதி அவன்தான் நமக்கு


1000)
முப்பதுக்கு ஓர்பாரதி; நூற்றி இருபதிப்போது;
எப்போது யார்வருவார் இங்கு


July 12, 2017

தேவன்வழி - 2 :- அன்பு..!



என்குறள்:- 991 - 995

ஒருவரின் மேல்ஒருவர் அன்பாய் இருங்கள்,நான்
உம்மேல் இருப்பதைப் போல்

யோவான் 113:34

உன்மேல்,நீ கொண்டிருக்கும் அன்பைப்போல், கொள்பிறர்மேல்
என்பது அனைத்திற்கும் தீர்வு

கலாத்தியர் 05:14

பிறரிடத்தில் என்னஎதிர் பார்த்தாயோ. செய்வாய்
அதைநீ முதலில் அவர்க்கு

மத்தேயு 07:12

வருத்தமுடன் பாரம் சுமப்போரே, என்னிடத்தில்
வாருங்கள், நான்தருவேன் ஓய்வு

மத்தேயு 11:28

உன்வாசல் தட்டுகிறேன், கேட்டுவந்தால், வாழ்ந்திருப்போம்,
உன்னுடன்நான் என்னுடன் நீ

வெளிப்படுத்தின விஷேசம் 3:20

நபிமொழி - 21 :- நீர் மேலாண்மை..!


என்குறள்:- 986 - 990

தேவைக்கு அதிகமாய் மீந்துள்ள தண்ணீரைத்
தேவையின்றித் தேக்கிவைத்தால் தப்பு
....... புகாரி 2353

வழிந்தோடும் நீரை, வழிப்போக்கர் தீண்டும்
வழியைத் தடுப்பது தீது
.................... புகாரி 2357

வான்மழை மூலம் இறந்த நிலத்துக்கு
நல்லுயிர் தந்தான் அவன்
.................. குர்ஆன் 16:65

சூல்மேகம் கொண்டு;வான் நீரை அவன்தருவான்;
பாழ்செய்வாய் தேக்காமல் நீ
................ குர்ஆன் 15:22

தண்ணீரைக் கொண்டு மனிதரைச் செய்தான்-ஆம்
தன்நிகர் இல்லான் அவன்
................... குர்ஆன் 25:54

July 9, 2017

குறுக்குசால் ஓட்டும் வாழ்வு ...!


981)
வாழ்வில் சிரிப்பதற்குக் கற்றுக்கொள், வாழ்வே
அழுவதற்குக் கற்றுத் தரும்


982)
’மீண்டேன்’ எனத்தெம்பாய்க் கண்விழித்தால், மீண்டும்
சுழியத்தைத் தாண்டவில்லை வாழ்வு


983)
தேர்வுவைத்தப் பின்னர்தான் தேர்வெழுதத் தீர்வுகளைக்
கற்றுத் தருகிறது வாழ்வு


984)
ஒன்றின்றி வாழ்வில்லை என்றிருப்போர் வாழ்விலதை
ஒன்றாமல் செய்துவிடும் வாழ்வு


985)
மிகப்பழையத் தீர்ப்பை, மிகப்புதியத் தீர்வைப்போல்
நாம்நடத்திச் செல்வதுதான் வாழ்வு

July 6, 2017

தேவன்வழி - 1.... மேய்ப்பாளனின் வாக்கு !!


வாழ்க உறவுகள் ....
தேவனின் மொழியும், தேவனின் வழியும் ...எல்லாரையும் சென்றடையும் வகையில், எளிய தமிழில், எளிய குறளில் என்நடையில் பதிக்கவேண்டும் ..என்னும் எனது கனவுத்திட்டத்தின் முதல்ப்படி இது .... அன்பு உள்ளங்கள் வழிகாட்டினால் தொடர்வேன் ..
( முக்கியக் குறிப்பு : வழிகாட்டி யாரும் இன்றி ... அவனை நம்பி.. சுயமாய் / சுயம்பாய்த் தொடங்கி இருக்கிறேன்... குற்றம் குறை இருந்தால், மாற்றுக் கருத்திருந்தால் குட்டிச் சொல்லுங்கள்... நன்றென நினைத்தால் தட்டி முன்செலுத்துங்கள் )
என்குறள்:- 975 - 980

நான்இருப்பேன் உன்னுடன், நான்பலம் தந்து
விடுவேன், திகையாது இரு

ஏசாயா 41:10

நல்லவற்றைப் போதிப்பேன், நீநடந்து செல்வதற்கு
நல்வழியைக் காட்டுவேன் நான்

ஏசாயா 48:17

என்சமுகம் உன்முன்னால் தான்செல்லும், உன்னோடு
இருந்துஇளைப் பாறவைப்பேன் நான்

யாத்திராகமம் 33:1

என்கிருபை என்பலம் போதும் உனக்கு,
பலவீனம் ஆகும் பொழுது

2கொரிந்தியர் 12:09

உன்வழியைக் காட்டுவேன் நானுனக்குப் போதிப்பேன்,
உன்மேல்கண் வைத்திருப்பேன் நான்

சங்கீதம் 32:08

முத்தமது....! முத்தம் அது......!!


முத்ததின வாழ்த்துகள் :))
துரைக்குறள் :- 971 - 975

இதழொன்றில் பக்கமிரண் டேதான் எனினும்
எழுதித்தான் தீராது அது

என்னில் அடங்கா உனைமடக்க நான்தருவேன்
எண்ணில் அடங்கா அளவு

செவ்வாயே ஆகாதென் போருமுண்டு; ஆனாலுன்
செவ்வாயே போதும் எனக்கு

வியர்க்காது உதடுக்கு எனினும் வியர்க்கவைக்கும்
என்பதுதான் இங்கு வியப்பு

’வரம்வேண்டும்’ என்பேன் ’தரவேண்டும் என்றால்
தரவேண்டும்’ என்பாள் அவள்

June 24, 2017

நபிமொழி - 20 :- இறையின் கணக்கு...!


உறவுகளுக்கு.... ரமலான் வாழ்த்துகள்
துரைக்குறள் :- 966 - 970

நன்றொன்றைச் செய்ய நினைத்தவுடன் உன்கணக்கில்
சேர்ந்துவிடும் நன்றின் பலன்
................... புகாரி 6491

அந்நன்றைச் செய்து முடித்தவுடன் உன்கணக்கில்
கூடிவிடும் நன்றுபல நூறு
..................... புகாரி 6491

பலனெதிர் பாராமல் நன்மையைச் செய்தால்
பலனுண்டு பத்து மடங்கு
...................... முஸ்லிம் 5215

நன்மை புரிவோர்க்குக் கண்மறைந்து காத்திருக்கும்
கண்குளிர வைக்கும் பரிசு
..................... குர்ஆன் 32:17

நன்மையைக் கொண்டு வருவோர்க்கு, அதைவிட
நன்மை அமைந்து விடும்
..................... குர்ஆன் 28:84

June 23, 2017

பழமொழி.. சொலவடை... தெளிவோம் - 3


அன்று....அருமையான பொருள் பொதிந்து உலவிவந்த பழமொழிகள்.... இன்று மறுவி... தவறான பொருள் தரும் பழிமொழிகளாக மாறி, நடைமுறையில் புழக்கத்திலும் உள்ளன .. அவற்றின் உண்மைப் பொருளை வெளிக்கொண்டு வரும் ஒரு முயற்சியின் மூன்றாம்படி இது ...

961)
வந்தான் அரக்கன் மயில்உருவில். கந்தன்
கவனம் கவண்அரு கில்

(கவண் – கவட்டை, ஆயுதம்)
[பழிமொழி - கந்தன் கவனம் கவட்டையில்..]

962)
வாழ்நாளில் ஆநெய்க்கு முன்காலம், பூநெய்க்குப்
பின்காலம்
தந்தோர்க்கு வாழ்வு
(ஆநெய்=பசுநெய், பூநெய்=தேன்)
[பழிமொழி - ஆனைக்கொரு காலம், பூனைக்கொரு காலம்..]

963)
தேர்ந்தெடுத்துப் பந்திக்க முந்து, சேர்ந்தபின்
படைக்கச் சிலகாலம் பிந்து,
(பந்திக்க – இணைபார்க்க, படைக்க – குழந்தைபெற)
[பழிமொழி - பந்திக்கு முந்து..... ]

964)
களவும் கவறு(ம்) அற,அதற்குக் கற்றக்
களவோடு கத்து மற
(கவறு – சூது, அற - தவிர், கத்து – பொய், கயமை )
[பழிமொழி - களவும் கற்று மற ..]

965)
ஆடியில் வீசும் அடர்காற்று பட்டவுடன்
அம்மை* பறந்து விடும்
(*நோய்)
[>பழிமொழி - ஆடிக்காற்றில் அம்மி பறக்கும்..]

June 22, 2017

உன்னால் முடியும்...!


956)
எட்டு திசையும் வழிபிறக்கும், தட்டும்
கதவு திறக்காத போது


957)
விடியுமென நம்பா விடினும் விடியும்;
முடியும் எனமுதலில் நம்பு


958)
தொடங்கும் எதற்கும் இருக்கும் முடிவு,
முதலில் துணிந்து தொடங்கு


959)
உன்னால் எதுவும் முடியும் எனநம்பு,
தன்னால் நடக்கும் அது


960)
எதுவந்த போதும் எதிர்கொள்வாய் என்றால்
இதுவும் கடந்து விடும்

June 18, 2017

அப்பா.. மறைக்கப்பட்ட சில உண்மைகள் !!

அப்பா தினம் !

951)
பெண்சுமப்பாள் மாதம்பத்து, ஆண்சுமப்பான், வாழ்வெல்லாம்,
பெண்அவளின் சுற்றத்தைச் சேர்த்து


952)
’ஒன்றும் தெரியாதுஉன் அப்பாவுக்கு’ என்றே
அறிமுகம் செய்வாள்தாய் சேய்க்கு


953)
சிரிக்கும்பெண் பேரழகு; சூழலின்பின் நிற்கும்
சிரிக்காத ஆணும் அழகு


954)
குலுங்கிஅழும் அம்மாவைக் காட்டிலும்,அப் பாவின்
கலங்கும்கண் காட்டும் தவிப்பு


955)
அம்மா அழகென்று அறிவோம், அவளறிவாள்
அப்பாதான் பேரழகு என்று